இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர் - கேரளாவே கொண்டாடும் அனுஜித் செய்த சாதனை என்ன தெரியுமா
பத்தாண்டுகளுக்கு முன்பு ரயில் விபத்து நடக்காமல் தடுத்து பலர் உயிரைக் காப்பாற்றிய அனுஜித் என்ற இளைஞர் பத்தாண்டுகளுக்குப் பிறகு உடல் உறுப்பு தானம் மூலம் 8 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரளாவே ஒரு இளைஞரை இப்போது கொண்டாடி வருகிறது. காரணம் அவர் செய்த சாதனைதான். அப்படி என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து பலநூறு உயிர்களைக் காப்பாற்றினார். இப்போதோ விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுஜித் மரணத்திற்குப் பிறகு எட்டு பேரின் உடலில் உயிர் வாழ்கிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவின் கொட்டாரக்கரை அருகே ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு இளைஞர் சிவப்பு நிற பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான். டிரைவருக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது. உடனே ரயிலை நிறுத்தினார். இறங்கி சென்று பார்த்த போது ரயில் தண்டவாளத்தில் இருந்த விரிசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் ரயில் ஓட்டுநர். ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் காப்பாற்றிய இளைஞர் பெயர் அனுஜித். நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அந்த இளைஞரின் படமும் சிகப்பு நிற பையும் எல்லா செய்தி தாள்களிலும் வெளியானது. இது நடந்தது ஆகஸ்ட் 31, 2010.
சரியாக பத்தாண்டுகள் கழித்து அதே அனுஜித் எட்டு பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். எப்படி தெரியுமா? இரு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுஜித் கொஞ்சம் கொஞ்சமாக மரணமடைந்து கொண்டிருந்தார். அந்த சூழ்நிலையிலும் அவரது பெற்றோர் அனுஜித்தின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்தனர்.
ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- சீமான் மகிழ்ச்சி
அனுஜித்தின் மனைவி பிரின்ஸி, சகோதரி அஜல்யா ஆகியோர் அனுஜித்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதயம், சிறுநீரகங்கள், கை எலும்புகள், சிறுகுடல் போன்றவை எட்டு பேருக்கு பொருத்தப்பட்டது.
அனுஜித்தின் மனைவி பிரின்ஸி தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். அம்மா விஜயகுமாரி, அப்பா சசிதரன்பிள்ளை ஆகியோர் அடங்கிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுஜித். லாக்டவுன் காரணமாக டிரைவர் வேலை இல்லாமல் போகவே சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். வேலைக்கு போகும்போதுதான் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டார். மரணத்திற்குப் பின்னரும் எட்டு பேருக்கு வாழ்வளித்த அனுஜித்தை கேரளமே கொண்டாடி வருகிறது.