கேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்
திருவனந்தபுரம்: கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான், முத்தலாக் முறையை மிக கடுமையாக எதிர்த்தவர்; இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
கேரளாவின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் நிறைவடைகிறது.
இதனையடுத்து கேரளாவின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். 1970களில் சரண்சிங்கின் பாரதிய கிராந்தி கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர் ஆரிப் முகமது கான். 26 வயதில் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்
முத்தலாக் விவகாரத்தில் ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸில் இருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார் ஆரிப் முகமது கான். தேசிய முன்னணி ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
பின்னர் ஜனதா கட்சியில் இருந்து விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் ஐக்கியமானார் ஆரிப் முகமது கான். பின்னர் 2004-ல் பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார் அவர். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் ஆரிப் முகமது கான்.
அண்மையில் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வந்தார் ஆரிப் முகமது கான். தற்போது கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆரிப் கான்.