அலைபாயுதே பாணி திருமணம் 6 ஆண்டு குடித்தனம்- மனைவியை புதைத்த கொடூரன் கைது
அலைபாயுதே பாணியில் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, பணக்கார பெண் கிடைத்த உடன் கொன்று புதைத்த ராணுவ வீரரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
திருவனந்தபுரம்: அலைபாயுதே சினிமா பட பாணியில் காதலித்து ரகசியமாக திருமணம் செய்த பெண்ணுடன் ஆறு ஆண்டுகள் ரகசியமாக குடித்தனம் நடத்தி விட்டு வேறு பணக்கார பெண் கிடைத்த உடன் ரகசிய மனைவியை கொன்று நிர்வாணமாக்கி உப்பை கொட்டி புதைத்திருக்கிறான். தப்பி ஓடிய அந்த கொடூரனை விமான நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்திருக்கிறது கேரளா போலீஸ்.
கேரளா சினிமாவின் கிரைம் திரில்லர் கதையை மிஞ்சும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. ராணுவ வீரருக்கும், பொறியியல் பட்டதாரி பெண்ணும் இடையே மிஸ்டுகாலில் ஏற்பட்ட காதல் ரகசிய திருமணம் வரை சென்று கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. பணக்கார பெண் கிடைத்த உடன் ஏழை மனைவியை கழற்றிவிட நினைத்தான். ஆதாரங்களுடன் அந்தப் பெண் மிரட்டவே, கடைசியில் கொன்று விட்டான்.
ரேகாமோள் என்ற அந்த பெண்ணை கொடூரமாக கொன்ற அந்த கயவனின் பெயர் அகில் நாயர். ராணுவத்தில் வேலை செய்யும் அகில் நாயருக்கு ரேகா உடனான அறிமுகமே எதிர்பாராத நிகழ்வுதான். மிஸ்டு கால் பார்த்து போன் செய்த அகிலுக்கு எதிர் தரப்பில் பேசிய ரேகாவின் குரல் பிடித்துப்போக தொடர்ந்து பேசி நட்பை வளர்த்து காதலாக மாற்றினான். அப்போது ரேகாவிற்கு தெரியாது அவன்தான் தனது உயிருக்கு எமனாவான் என்று.
ரேகா மாயமான மர்மம்
ரேகா மோள் கடந்த மாதம் 21ஆம் தேதி தனது தோழிகளைப் பார்க்க எர்ணாகுளம் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு போனவர்தான் அதன்பிறகு காணவில்லை. மாயமான அவரை வீட்டினர் சொந்தக்காரர்கள் வீட்டில் தேடி வந்தனர். கிடைக்காமல் போகவே போலீசில் புகார் அளித்தனர்.
மகளை காணாது தவித்துப்போன பெற்றோர் பூவார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து நூல் பிடித்தனர். ரேகா மாயமான நாளில் அகில் என்பவரின் போன் வந்துள்ளது. கடைசியாக அம்பூரி பகுதியில் ரேகாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. அதே நாளில் அகில் நம்பருக்கு அடிக்கடி பேசிய எண்ணை பார்த்த போது அது ஆதர்ஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்தனர்.
உப்பை கொட்டி புதைப்பு
ஆதர்ஷை கைது செய்த போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, ரேகாவை கொன்று புதைத்து விட்டதாக கூறினார். அவர் கூறிய ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி ரகமாக இருந்தது. ரேகாவை அம்பூரியில் உள்ள அகிலின் வீட்டின் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்திருப்பதாக கூறவே அங்கு சென்ற போலீசார் ரேகாவின் உடலை தோண்டி எடுத்தனர். நிர்வாண நிலையில் இருந்த ரேகாவின் உடலை சுற்றியும் உப்பை கொட்டியிருந்தனர். பார்த்த உடனே மனதை பதைபதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலையை எதற்காக செய்தனர் என்று விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
சினிமா பாணி திருமணம்
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை அருகே உள்ள பூவார் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் ரேகாமோள். இவருக்கும் அகில் நாயருக்கும் இடையோன காதலுக்கு அகில் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. காரணம், ரேகா ஏழை என்பதால் வந்த எதிர்ப்புதான். ஆனாலும் எதிர்ப்பை மீறி ரேகாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு தெரியாமல் திருமணத்தை மறைத்து வைத்தனர்.
கழற்றி விட்ட அகில்
ரேகாவிற்கு எர்ணாகுளம் அருகே வேலை கிடைத்தது. அகிலும் தனது ராணுவப்பணியை தொடர டெல்லிக்கு போய்விட்டார். ரேகாவை திருமணம் செய்வதாகவும் கூறி வாக்குறுதி அளித்தார் அகில். நாளடைவில் அகில் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அகிலுக்கு பணக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இது ரேகாவிற்கு தெரியவரவே கொதித்துப்போனார். அகிலை விட ரேகாவிற்கு மனமில்லை.
மூன்று மாதங்களாக திட்டம்
தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அகிலுக்கு நிச்சயம் செய்த பெண்ணை பார்த்து தங்களின் காதல் பற்றியும் அதற்கான ஆதாரங்களையும் காட்டினார் இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அகிலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ரேகாவின் கதையை முடிக்க மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டம் போட்டார் அகில். அதற்காக தனது சகோதரர் ராகுல், அவரது நண்பர் ஆதர்ஷ் உடன் இணைந்து திட்டம் போட்டார்.
பேசி வரவழைத்த ராகுல்
ஜூன் 20ஆம் தேதி ரேகாவிற்கு போன் செய்த அகில் தனது அம்பூரி வீட்டிற்கு வரச்சொன்னார். அதனை உண்மை என்று நம்பிய ரேகா, தனது தோழிகளை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இனிப்பு பெட்டியுடன் அகிலை பார்க்கப் போனார். நெய்யாற்றின்கரை வந்த ரேகாவை வாடகைக் காரில் வந்த அகில் ஏற்றிக்கொண்டு தனது வீடு இருக்கும் அம்பூரிக்கு அழைத்துக்கொண்டு வந்தார். போன இடத்தில் ரேகாவை மிரட்டினார் அகில் அதற்கு ரேகா மசியவில்லை. தனது சகோதரனுடன் ரேகாவை கழுத்தை இறுக்கி கொன்றான். உடைகளை அவிழ்த்து எரித்து விட்டு நிர்வாணமாக குழியில் போட்டு மூடி உப்பை கொட்டி வைத்து விட்டான்.
சிக்கிய சடலம்
ஜூன் 21ஆம் தேதி வீட்டை விட்டுப்போன மகளைப் பற்றி எந்த தகவலும் இல்லை மகளை காணாத தவித்த பெற்றோர் எர்ணாகுளம் சென்று விசாரித்த போது அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்தே போலீசில் புகார் அளித்தனர். ஆதர்ஷ் வசமாக சிக்கவே உண்மை வெளியே வந்தது. ரேகாவின் சிதிலமடைந்த சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ரேகா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அகில் தலைமறைவாகிவிட்டான்.
நான் கொல்லவில்லை
அகில் டெல்லி சென்று ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். டெல்லிக்கு தனிப்படை போலீசார் சென்று விசாரித்த போது அங்கும் வரவில்லை என்று தெரியவந்தது. இதனிடையே ரேகா கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் விரைவில் சரணடைவேன் என்றும் ஒரு தகவல் திருவனந்தபுரம் போலீசுக்கு வந்தது. நூல் பிடித்து விசாரித்த போலீஸ் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து அகிலை கைது செய்தனர்.
நிர்வாணமாக்கி உப்பை கொட்டி புதைப்பு
ரேகாவின் சடலத்தை நிர்வாணமாக்கி உப்பை கொட்டியது ஏன் என்று போலீஸ் விசாரித்த போது, உடல் சீக்கிரம் அழுகவேண்டும் என்பதற்காகவே நிர்வாணமாக்கி உப்பை கொட்டி புதைத்ததாக கூறினான். உடல் புதைத்தது தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பாக்கு மரங்களையும் நட்டு வைத்துள்ளனர்.
ஏமாற்றிய அகில்
கைவிட மாட்டான் என்று நம்பி ரகசியமாக திருமணம் செய்த ரேகாவை பணக்கார பெண் கிடைத்த உடன் கை கழுவ நினைத்ததோடு, எதிர்த்து கேள்வி கேட்டதற்கு இப்படி கொன்று புதைத்து விட்டானே என்று பெற்றோர்கள் கதறி துடிக்கின்றனர். ஒரே ஒரு மிஸ்டு காலில் வாழ்க்கை ஆரம்பித்து கடைசியில் வஞ்சகனின் வலையில் சிக்கி உயிரிழந்து விட்டார் ரேகா. அகிலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது ரேகா பெற்றோர்களின் வலியுறுத்தலாக உள்ளது. குற்றவாளிகள் மூவரையும் விசாரணைக்காக போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். ஏன் இந்த கொலை என்று விசாரணையில் விரிவாக தெரியவரும்.