மதவெறியர்களுக்கு “நோஸ் கட்”.. பந்தால் பதம் பார்த்த அர்ஷ்தீப் - ஒரே ஓவரில் தெ.ஆவை சரித்த ‘சிங்’கம்
திருவனந்தபுரம்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்சை தவற விட்டதற்காக தன் மீது மதவெறி விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி இந்திய அணியை தோல்வியடைந்தது.
இந்திய அணி பாகிஸ்தானில் தோற்ற கோபத்தை ரசிகர்கள் பலரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மீது காட்டத் தொடங்கினர். போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் வீரர் ஆசிப் அலியின் கேட்சை இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தவறவிடுவார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்.. ஒன்றாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் - பும்ரா.. என்ன திட்டம்!
மதவெறி விமர்சனம்
இதனால் ஆத்திரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அர்ஷ்தீப் சிங்கை பார்த்து மைதானத்திலேயே கத்தினார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாச பாகிஸ்தான் வெற்றிபெற்றது. உடனே ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் மதவெறியர்கள் சிலர் அர்ஷ்தீப் சிங்கை காளிஸ்தானின் என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து வந்தனர்.
தென்னாப்பிரிக்கா போட்டி
இந்த நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா தீபக் சஹார் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அர்ஷ்தீப் பந்துவீச்சு
2 வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், தான் வீசிய 2 வது பந்திலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர் குவிண்டன் டீகாக்கிற்கு ஸ்டம்பை பதம் பார்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதே ஓவரின் 5 வது பந்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரொஸ்ஸோவ் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் ஸ்டம்பையும் தெறிக்கவிட்டார் அர்ஷ்தீப் சிங்.
3 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் வீசிய 2 வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தென்னாப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. 2 ஓவர்களிலேயே 8 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆட்டத்தை தக்க வைக்க அந்த அணி நிதானமாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசியில் அந்த அணி 106 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த இலக்கை இந்திய அணி 17 வது ஓவரிலேயே கடந்து வெற்றிபெற்றது.