ஆசியாவிலேயே அதிக வயது.. 88 வயதிலும் கம்பீரமாக வலம் வந்த ''தாக்சாயினி யானை''.. காலமானது!
மிகவும் பிரபலமான யானையான 88 வயதான கேரளாவை சேர்ந்த தாக்சாயினி யானை இன்று அதிகாலை காலமானது.
திருவனந்தபுரம்: மிகவும் பிரபலமான யானையான 88 வயதான கேரளாவை சேர்ந்த தாக்சாயினி யானை இன்று அதிகாலை காலமானது.
பொதுவாக யானைகளின் வாழ்நாள் மனிதர்களின் வாழ்நாள் போலவேதான். நிறைய யானைகள் 70 வயது வரை சராசரியாக வாழும். சில ஆண் யானைகள் 100 வயதை தாண்டி கூட வாழ்ந்து இருக்கிறது.
இந்த நிலையில் கேரளாவில் இருந்த தாக்சாயினி யானைதான் ஆசியாவிலேயே மிக வயதான கேப்டிவ் யானை ஆகும். கேப்டிவ் யானை என்றால் காட்டில் வசிக்காத, கோவில், சர்க்கஸ் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் யானை ஆகும்.
சாதனை படைக்க போனது
இந்த யானைக்கு 88 வயதாகிறது. இதுதான் ஆசியாவில் வயதான யானை என்பதால், யுனைட்டட் ரெக்கார்ட் போரமில் இதன் பெயர் இடம் பெற்றது. விரைவில் இது கின்னஸ் சாதனை படைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று காலை 3.30க்கு மணிக்கு இது மரணம் அடைந்தது.
70 வருடம்
செங்கல்லூரில் இருக்கும் மகாதேவா கோவிலில்தான் இது பணியாற்றி வந்தது. 70 வருடமாக இது அந்த கோவிலில் இருந்தது. தற்போது வயது முதிர்வு காரணமாக இது மரணம் அடைந்துள்ளது. இதன் இறுதி ஊர்வலத்தை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
முக்கியமான யானை
செங்கல்லூர் மகாதேவா கோவிலில் மட்டுமில்லாமல் திருவனந்தபுரத்தில் நடக்கும் பெரிய விழாவான ஆட்டிங்கால் விழாவிலும் இந்த யானை கலந்து கொள்ளும். இரண்டிலும் இந்த யானைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கான தனி அலங்காரம் செய்யப்பட்டு கவனிப்புகள் நடக்கும்.
மக்களுக்கு பிடிக்கும்
இந்த யானையை பார்க்கவே அந்த கோவிலுக்கு மக்கள் தினமும் வருவதுண்டு. கேரளா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இதன் வயது காரணமாக இது பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. தினமும் இதை நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சந்தித்து செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த அளவிற்கு பிடிக்கும்
இந்த யானையின் மரணம் தற்போது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த யானையை அந்த ஊரின் ஒரு நபராக மக்கள் பார்த்து வந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.