கொரோனா தொல்லையே தாங்கல.. பறவைக் காய்ச்சலும் பரவுதாம்.. அப்போ, சன்டே சிக்கன் இல்லையா?
திருவனந்தபுரம்: ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு அது உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவைப் பொருத்த அளவில் இதுவரை 31 பேர் அதற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதன் முதலில் இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கேரளாவில் தான் கண்டறியப்பட்டனர்.
அந்த இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருபக்கம் வைரசுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் பள்ளிகளுக்கு கூட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு
இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பகுதியிலுள்ள ஒரு கோழிப்பண்ணையில் Bird flu எனப்படும் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில கால்நடை பராமரிப்புத்துறை உறுதிசெய்துள்ளது. பறவைக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.
ரத்த மாதிரி
இருப்பினும் மாநிலம் முழுக்க உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கேரளாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. அது மனிதர்களுக்கும் பரவியது. இதன் பிறகு தற்போது மீண்டும் அது போன்ற ஒரு காய்ச்சல் அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கோழிப்பண்ணையில், தினமும் சுமார் 200 கோழிகள் மரணமடைந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
போபால்
கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் சிந்து நிருபர்களிடம் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை இந்த கோழிப்பண்ணையில் நடைபெற்ற கோழிகளின் மரணம் தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவற்றின் ரத்த மாதிரிகள் கண்ணூர் பரிசோதனை மையத்துக்கும், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பரிசோதனை மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன என்றார்.
Recommended Video
நாளைக்கு சன்டே
பரிசோதனைகளில், குறிப்பிட்ட பண்ணையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது, என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததில் இருந்து, கேரளாவில் சிக்கன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாளை சன்டே என்பதால், சிக்கன் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழக எல்லைகளில் கேரளாவிலிருந்து வரும் சிக்கன் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு பணிகளை துவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.