நீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் களமிறக்கப்படுவார் என்று தான் முன்பு கூறிய தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சர் முரளீதரன், இது குறித்து இன்னும் கட்சி முறையாக அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இடதுசாரிகள் தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி எனக் கேரளாவில் இரண்டு முக்கிய அணிகள் உள்ளன. பாஜக அங்கு மூன்றாவது அணியாக உருவாக முயன்று வருகிறது.
முன்னதாக இன்று மதியம் மத்திய அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளீதரன், "கேரளாவில் ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராகக் கொண்டு பாஜக தேர்தலைச் சந்திக்கும். கேரள மக்களுக்கு ஊழல் இல்லாத, வளர்ச்சி சார்ந்த ஆட்சியை வழங்க சிபிஐஎம் மற்றும் காங்கிரஸ் என இரண்டையும் தோற்கடிப்போம்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்!
இருப்பினும், சில மணி நேரத்தில் முரளீதரன் தனது ட்வீட்டை டெலிட் செய்து விட்டார். இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், "முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜ அறிவித்துள்ளதாக சில ஊடகங்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே அப்படி ட்வீட் செய்தேன்.
பின்னரே கட்சித் தலைமையிடம் இது குறித்து விசாரித்தேன் அவர்கள் இவ்வாறு எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்கள். இதனாலேயே அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.