முடியலை.. 4வது முறையாக பாஜக பந்த்.. கேரளாவில் மக்கள் பெரும் அவதி!
Recommended Video
திருவனந்தபுரம்: தலைமைச் செயலகம் முன்பாக பாஜக நடத்திய போராட்டத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளா முழுவதும் பாஜக இன்று பந்த் போராட்டம் நடத்தி வருகிறது.
கேரளாவில் தினசரி ஏதாவது ஒரு ஊரில் ஹர்த்தால் நடத்துவது வாடிக்கையாகும். இதனால் அங்கு மக்கள் படும் அவதி சொல்லி மாள முடியாது. இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் ஒரு பந்த் போராட்டம் நடக்கிறது.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பாஜக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தீக்குளித்த பாஜக தொண்டர்
திருவனந்தபுரத்தில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில், நேற்று முட்டடை அஞ்சுமுக்கு பகுதியைச் சேர்ந்த வேணுகோபாலன் நாயர் (49) என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து வேணுகோபாலனில் உடலில் இருந்த தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து 70 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்த வேணுகோபாலனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
முழு அடைப்பு
இதையடுத்து கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக இன்று நடைபெறும் என நேற்று அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் இருந்து பேருந்துகள் எதுவும் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. பாஜக போராட்டம் காரணமாக கேரளாவில் அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கேரளாவில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பேருந்துகள் நிறுத்தம்
பாஜகவின் முழு அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் தமிழக பேருந்துகள், சரக்கு வாகனங்கள், எல்லைப்பகுதியான களியக்காவிளையுன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கேரளா செல்லும் பயணிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் குமளி, பாலக்காடு, வழியாக கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் எல்லையுடன் நிறுத்தப்பட்டன.
சபரிமலை வாகனங்கள்
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாது என பாஜக அறிவித்திருந்ததால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன. இதற்கிடையே சபரிமலை நடை திறந்த பின்பு பாஜக நான்காவது முறையாக இன்று பந்த் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.