நகரங்களிலும் சறுக்கிய பாஜக.. மாநகராட்சிகளை வெல்ல முடியவில்லை.. திருவனந்தபுரத்தில் மட்டும் 2வது இடம்
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாஜக கூட்டணியை புறக்கணித்துள்ளது டிரெண்ட் மூலம் தெரியவருகிறது.
கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. தலைநகரமான, திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் ஆகியவை மாநகராட்சிகள் ஆகும்.
இதில், ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. திருச்சூர் மற்றும் கன்னூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஆனால், பாஜக தலைமையிலான கூட்டணி எந்த ஒரு மாநகராட்சியிலும் முன்னிலை வகிக்கவில்லை. அதேநேரம், திருவனந்தபுரத்தில் அந்த கட்சி இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. 30 வார்டுகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். கடந்த முறை பாஜக 34 வார்டுகளை வென்றது. எனவே இதுவும் பெரிய வெற்றி இல்லைதான்.
"டிட்டு அப்படியே.." கேரளாவில் பாஜக வியூகம்.. நொறுக்கிய வாக்காளர்கள்.. தமிழக தேர்தலிலும் இதுதான் கதி?
திருவனந்தபுரத்தை தொடர்ச்சியாக பல தேர்தல்களில் பாஜக தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்துவருகிறது. ஆனால் காங்கிரஸ் அல்லது இடதுசாரிகளின் கோட்டையாக இருந்து வருகிறது.
பொதுவாக நகர்ப்புற மக்கள், பாஜகவுக்கு அல்லது நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற ஒரு பிம்பம் உள்ளது. கேரளாவில் அதுவும் நடக்கவில்லை. இருப்பினும் கடந்த முறையை விட, மூன்று மடங்கு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணியோடு ஒப்பிட்டால் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது.