கேரளாவில் பறக்கிறது இடதுசாரிகள் கொடி.. உள்ளாட்சி தேர்தலில் அபாரம்.. குறைந்த இடங்களில் பாஜக முன்னிலை
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெகு தூரத்தில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கேரளாவில், 3 கட்டங்களாக கடந்த டிசம்பர் 8, 10 மற்றும் 14ம் தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவு எண்ணிக்கை 76 சதவீதம் எந்ற அளவில் இருந்தது.
இன்னும் சில மாதங்களில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள், ஒரு அரையிறுதி போல பார்க்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, 941 பஞ்சாயத்துகளில் 442 இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) முன்னிலை வகிக்கிறது. 344 பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யு.டி.எஃப்) மற்றும் 33 பஞ்சாயத்துகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இடதுசாரி கூட்டணி, மாவட்ட பஞ்சாயத்துகள் (12 (இடதுசாரி) மற்றும் 2 (காங்கிரஸ் கூட்டணி)), மாநகராட்சிகள் (4 மற்றும் 2) மற்றும் பிளாக் பஞ்சாயத்துகள் (100 மற்றும் 49 ) என்ற அளவுக்கு முன்னிலை வகிக்கின்றன.
திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி அபார முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2வது இடமும், பாலக்காடு நகராட்சியில் முதலிடத்திலும் உள்ளது பாஜக.