அடுத்து கேரளா தான்..பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக சார்பில் முதல்வர் வேட்பளாகர மேட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 140 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கேரள மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் மூன்றாவது அணியாக உருவாக பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மக்கள் மத்தியில் ஆதரவை திரட்ட மேட்ரோ மேன் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.
கேரளாவில் கூட்டணி
கேரளாவைப் பொறுத்தவரை தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்ட இடதுசாரிகள் ஒரு அணியாக உள்ளது. அவர்களை எதிர்த்து காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக உள்ளன. இந்த இரு கட்சிகளுக்கு மத்தியில் மூன்றாவது அணியாக உருவாக வேண்டும் என்றே பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
கடந்த காலம்
கடந்த காலங்களைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி ஆகிய இரண்டும்தான் கேரள மாநிலத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்துள்ளன. அவர்களை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கேரளாவில் காலூன்ற முடியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் கூட 98 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவால் வெறும் ஒற்றை தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது.
ஏபிபி கருத்துக்கணிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதிலும்கூட பல ஆண்டுகளுக்குப் பின் இடதுசாரிகள் கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 55 இடங்களில் வென்று, இரண்டாம் இடம் பிடிக்கும். அதேநேரம் பாஜக இம்முறையும் 0-2 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
முதல்வர் வேட்பாளர்
இது பாஜகவினரையே அப்சட்டில் ஆழ்த்தியது. நாட்டை கடந்த 6 ஆண்டுகளாக ஆளும் தேசிய கட்சியின் கூட்டணியால் இரட்டை இலக்கில்கூட வெல்ல முடியவில்லை என்று அது கவுரமாக இருக்காது என்பதால் அடுத்தகட்ட திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்தது. அதன் பின்னரே தற்போது மேட்ரோ மேன் ஸ்ரீதரனை அக்கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
டெல்லி மெட்ரோ ரயில், நாட்டின் பல சிக்கலான பாலங்கள் என முக்கிய கட்டுமானங்களை உருவாக்கியவர் மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜகவின் இணைந்தார். கேரள மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களைக் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை என்றும் கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றும் சூசகமாக அப்போதே தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
ஒரு சிக்கல்
இருப்பினும், இடையே ஒரு ஒரு சிக்கல் மட்டும் இருந்தது. மேட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு இப்போது 88 வயது ஆகிறது. 75 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவது, முக்கிய பொறுப்புகளை வழங்குவது ஆகியவற்றில் மோடி-அமித் ஷா தலைமைக்கு உன்பாடு இல்லை. இருப்பினும், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த விதிகளையும் அவர்கள் தளர்த்தியுள்ளனர்.
முடிவு ஏன்
கேரளாவில் மிகவும் வீக்காக உள்ளதால் அங்கும் இந்த விதியை தளர்த்தி மேட்ரோ மேன் ஸ்ரீதரனை முன்னிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சபரிமலை போராட்டத்திலும்கூட கேரளாவில் பாஜகவுக்குக் கொஞ்சம் ஆதரவு கிடைத்தது. அத்துடன் நல்ல நிர்வாகி என்ற பெயர் எடுத்துள்ள ஸ்ரீதரனும் கட்சியில் இணைந்துள்ளதால், இது கட்சிக்கு பூஸ்ட் கொடுக்கும் என நினைக்கின்றனர். ஆளும் கட்சியாக வர முடியவிட்டாலும்கூட, இரட்டை இலக்கில் கவுரமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் இந்து முடிவுக்குக் காரணம்!