வெள்ள வேலைக்கான பில்.. இந்தாங்கோ.. கேரளாவுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!
Recommended Video
திருவனந்தபுரம்: வெள்ள நிவாரணப் பணியின் போது அனுப்பப்பட்ட விமானத்திற்கு, கட்டணம் செலுத்தும்படி மத்திய அரசு பில் அனுப்பி இருப்பது வேதனை அளிப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவை மழை வெள்ளம் புரட்டி போட்டதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 200 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டின. அதே நேரம் வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டன. இதனால், சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, 600 கோடியை மட்டும் மத்திய அரசு நிவாரண உதவியாக அளித்தது.
இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "இந்திய விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக கேரள அரசிடம் 31 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்பட்டது. அதே சமயம், அவசர உதவிக்காக முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடியும், சீரமைப்பு பணிகளுக்கு, 5,616 கோடி ரூபாயும் கோரப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு மௌனம் காத்தது. பின்னர், மத்தியக் குழு நேரில் வந்து ஆய்வு நடத்தியது, இருப்பினும் இன்று வரை நிவாரண உதவி முழுமையாக கிடைக்கவில்லை என்று கவலை தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கூடுதலாக வழங்கும் படி கேட்டுக் கொள்ளபட்ட போதும், மத்திய அரசு அதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்தநிலையில், வெள்ளத்தின் போது உதவியதற்காக 33 கோடி ரூபாய்கான பில்லை மத்திய அரசு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.