கேரளாவில் பசிக் கொடுமை.. அழுதபடியே கை நிறைய மணலை அள்ளி உண்ட குழந்தைகள்.. தாய்க்கு அரசு வேலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பசிக் கொடுமையால் அழுதபடியே கை நிறைய மணலை அள்ளி குழந்தைகள் உண்ட வீடியோ வைரலான நிலையில் அக்குழந்தைகளின் தாய்க்கு வேலை வழங்கியது கேரள அரசு.
சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசிக் கொடுமையால் இரு குழந்தைகள் தரையில் கிடக்கும் மணலை அள்ளி உண்ணும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைத்தது.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் குழந்தைகள் மணலை அள்ளி உண்ட இடம் கைதாமுக்கு ரயில்வே புறம்போக்கு இடம் என்பது தெரியவந்தது.
ஸ்ரீதேவி
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த குழந்தைகள் ஸ்ரீதேவி என்பவருடையது என தெரியவந்தது. அங்கு அதிகாரிகள் போய் பார்த்தனர். அதில் தார்பாய் போடப்பட்ட குப்பைக் கூளங்கள் நிறைந்த பசியில் ஸ்ரீதேவி வசித்து வருவது தெரியவந்தது.
கூலி வேலை
இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 7 வயதுதான் ஆகிறது. கடைசி குழந்தை பிறந்த 3 மாதங்களே ஆனது. இவரது கணவர் மதுவுக்கு அடிமையானவர். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் குடித்து விடுவது தெரியவந்தது.
வழியில்லை
இதனால் ஸ்ரீதேவியும் குழந்தைகளும் பல நாட்களாக உணவருந்தாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பதற்குக் கூட உணவு உண்ண ஸ்ரீதேவிக்கு வழியில்லாமல் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.
வெந்நீர்
வீட்டுக்குள் சென்று பார்த்த போது அடுப்பில் வெந்நீர் மட்டும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியின் அனுமதியுடன் 4 குழந்தைகளை அரசு காப்பகத்தில் பராமரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள ஒன்றரை வயது மற்றும் 3 மாத குழந்தைகள் இரண்டும் சிறிய குழந்தைகள் என்பதால் அவர்கள் தாயின் பராமரிப்பில் இருக்க விட்டுவிட்டனர்.
எதிர்பார்ப்பு
ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்ததுடன் அவர்கள் மாநகராட்சி குடியிருப்பில் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் மதுபோதையில் இருந்த கணவரை தேடிபிடித்த அதிகாரிகள் அவரை கண்டித்தனர். ஸ்ரீதேவியின் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.