'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தை, தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் விருப்பம் போல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தால் கொதித்து போன கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவைப்பட்டால் தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த அரசு தயங்காது எனறு எச்சரித்தார்.
கேரளாவில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசியர்கள் நியமன விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி கேரள சட்டபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆசிரியர் நியமனம் தொடர்பாக பேசுகையில், "கேரளக் கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாகப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகிறது. கேரள அரசு, ஆசிரியர்களை நியமிக்கும் முன்பாக பள்ளி நிர்வாகங்களே அதை தங்கள் கையில் எடுத்து செய்கின்றன இனிவரும் காலங்களில், ஆசிரியர் நியமனங்களை அரசே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது" என்றார்.
கேரள அரசின் இந்த முடிவுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தனியார் பள்ளிகள் எச்சரித்துள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் இந்த போராட்ட அறிவிப்பால் கொதித்து போன கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஆசிரியர் நியமனங்களை தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தத் தயங்காது'' என்று எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மானி கொல்லம், "முதல்வர் பினராயி விஜயன் தவறாகப் புரிந்துகொண்டதாலேயே இப்படி பேசி உள்ளார். அரசின் சட்டத்துக்கு உட்பட்டே ஆசிரியர் நியமனங்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக அனைத்துத் தனியார் பள்ளி நிர்வாகங்களையும் அரசு அழைத்துப் பேச வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து, பள்ளிகளை எடுத்துக்கொள்வோம் என்று பேசுவது சரியல்ல" என்றார்.