17 வயது நடிகைக்கு "டார்ச்சர்".. அம்பலப்படுத்திய ரேவதி.. அவர் மீதே புகார் பாய்ந்ததால் பரபரப்பு!
Recommended Video
திருவனந்தபுரம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு கதறியதாக நடிகை ரேவதி பேட்டி அளித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த ரேவதி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் திரைத்துறை, அலுவலகம் என பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பிரபலமானவர்கள் மீது சொல்லப்படும் போது இது பூதாகரமாக வெடிக்கிறது.
இந்நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் கொச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ரேவதி பேசுகையில் மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரவில் 17 வயது மதிக்கத்தக்க இளம் நடிகை ஒருவர் என் அறை கதவை தட்டினார். நான் கதவை திறந்த போது அக்கா என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு அழுதார். இது போன்று பல சம்பவங்கள் மலையாள சினிமாவில் நடந்து வருவது வேதனையளிக்கிறது என்றார் ரேவதி.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர் எர்ணாகுளம் மத்திய போலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள படப்பிடிப்புக்கு இடையே 17 வயது நடிகையை பலாத்காரம் செய்ய யாரோ முயற்சித்ததாக நடிகை ரேவதி கூறியுள்ளார். அவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரேவதியிடம் கேட்ட போது அவர் கூறுகையில் 17 வயது நடிகை நள்ளிரவில் கதவை தட்டினார் என்றுதான் சொன்னேன். மற்றபடி பாலியல் பலாத்கார முயற்சி நடந்தது என்று நான் கூறவில்லை. அந்த பெண்ணுடன் அவரது பாட்டியும் வந்திருந்தார். பெண்களுக்கு தொழில்புரியும் இடத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை தெரிவித்தேன் என்றார்.