திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி.. டம்மியால்.. நிலைகுலைந்த காங். கூட்டணி பெண் வேட்பாளர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வேட்பாளர் ஒருவர், தேர்தல் முடிவுகள் வெளியான அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். பாஜக வேட்பாளரிடம் வெறும் 26 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.
கேரளாவில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்த முடிந்ததது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. இதில் பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. ஆனால் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை மட்டும் பாஜக கைப்பற்றியுள்ளது.

இதில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் பா.ஜனதா வேட்பாளர் சுவாதியிடம் 26 வாக்குகள் வித்தியாசத்தில் சினி தோல்வியடைந்தார். இந்த தோல்வியால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து போனார். இந்த வார்டில் சினி என்ற பெயரில் மேலும் 2 பெண் டம்மி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்கு மொத்தம் 44 வாக்குகள் கிடைத்தன. இதுதான் சினியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டில் இருந்த சினி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சினி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறினார்கள். இது காங்கிரஸ் கூட்டணி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சினி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.சபரிநாத், "சினி சேச்சி இடவக்கோடு கோட்டையை மீட்டெடுக்கப் போராடினார். அவர் தோல்வியடைந்த இந்த 26 வாக்குகளுக்கும் மேலாக, அதே பெயரில் போட்டியிட்ட மற்ற இரண்டு வேட்பாளர்கள் 44 வாக்குகளைப் பிரித்திருக்கிறார்கள்," என்று கூறினார். உடல்நல பாதிப்பு இருந்தபோதிலும் அவர் அயராது உழைத்ததையும் சபரிநாத் நினைவுகூர்ந்தார். தேர்தல் தோல்வியின் தாக்கம் ஒரு உயிரையே பலி கொண்ட இந்தச் சம்பவம் வேட்பாளர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications