மென்மையான இந்துத்துவா போக்கு...இதுதான் காங்கிரஸ்... பினராயி விளாசல்!!.
திருவனந்தபுரம்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் மவுனமாக இருந்தது. அப்போது இந்தியன் முஸ்லிம் லீக்கும் காங்கிரசுடன் இணைந்து அமைதியாக இருந்தது. காங்கிரஸ் எப்போதுமே மென்மையான இந்துத்துவா போக்கை கடைபிடித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். முதல் செங்கலை மோடி எடுத்துக் கொடுத்தார். இதற்கு முன்னதாக அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்தும், இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இதுகுறித்து கேரளா முதல்வர் பினராய் விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ''பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டு இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மென்மையான இந்துத்துவா போக்கை எப்போதுமே காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. இது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ராஜீவ் காந்தியில் இருந்து நரசிம்ம ராவ் வரையிலும் அனைவருமே இந்தப் போக்கைத்தான் கடைபிடித்து இருக்கின்றனர். மதச்சார்ப்பற்ற விஷயத்தில் காங்கிரஸ் உறுதியான கொள்கையை கடைபிடித்து இருந்தால், தற்போது இந்தியாவுக்கு இந்த சூழலே ஏற்பட்டு இருக்காது.
பாபர் மசூதியில் சாமி கும்பிடுவதற்கு காங்கிரஸ்தான் அனுமதித்தது. கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு காங்கிரஸ்தான் அனுமதித்து இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கர் சேவாவுக்கு அனுமதித்து இருந்தனர். பாபர் மசூதியை இடித்தபோது வாய் மூடி மவுனமாக இருந்தது யார்? நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் மவுனமாக இருந்தது. ஒரு பக்கம் கர் சேவாவுக்கு அனுமதியளித்து, மறுபக்கம் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.
இது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு!
இதில் மற்றொன்றும் குறிப்பிட வேண்டியது இருக்கிறது. காங்கிரசுடன் அப்போது இந்தியன் முஸ்லிம் லீக்கும் அமைதியாகத்தான் இருந்தது. இவையெல்லாம் இந்திய வரலாற்றின் ஒரு அங்கமாக பதித்துள்ளது.
நாடு தற்போது மோசமான கொரோனா நோயை எதிர்கொண்டு வருகிறது. 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். மக்கள் கையில் பணம் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர். இதை எப்படி களைவது என்று சிந்திக்க வேண்டும். இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என்றார்.