சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா - தனிமை முகாம்களில் தங்கவைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 36 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலை கோவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
மண்டல பூஜை மற்றும், மகர விளக்கு காலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம்தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2ஆம்தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆண்டுதோறும் மண்டல பூஜை காலங்களில் பக்தர்களால் நிரம்பி வழியும் சபரிமலை கோவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.
தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் இப்போது கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
அடுத்த 6 மாதங்களில்... கொரோனா அதிகமாக இருக்கும்... எச்சரிக்கும் பில்கேட்ஸ்!
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமியை நிதானமாக நின்று தரிசித்து வருவதாக கூறியுள்ளனர். கடந்த ஆண்டை போல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சபரிமலைக்கு வரும் வருமானம் மிகவும் குறைந்து உள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 36 பேருக்கு கொரோனா உறுதியானது. பம்பை, நிலக்கல்லில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கோயில் பணியில் இருந்த ஊழியர்கள், போலீசார் என 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.