நிபா வைரஸ்.. மழை வெள்ளம்.. கொரோனா வைரஸ்... கேரளாவில் 3-வது முறையாக திருமணத்தை ஒத்திவைத்த காதல்ஜோடி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இயற்கை விதித்த தடையால் ஒரு இளம் ஜோடியின் திருமணம் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிபாவைரஸ், மழைவெள்ள பாதிப்பு, கொரோனா வைரஸ் தாக்கத்தால் தங்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டாலும் சமுதாய அக்கறை காரணமாக அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர் அந்த காதல் ஜோடிகள்.
இதனிடையே இந்த ஜோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க 4-வது முறையாக நாள் குறிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 2018
கோழிக்கோடு இராங்கிபாலம் பகுதியை சேர்ந்த பிரேமசந்திரன் -சந்திரா சந்தோஷ் ஆகிய இருவரும் சிறுவயது முதலே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த அவர்களது பெற்றோர்கள் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி தேதி குறித்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கினர். அப்போது கேரளாவில் அதுவும் குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் பகுதியில் நிபா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தது. 17 பேர் வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோக சம்பவங்களும் நடந்துள்ளன.
ரத்த சொந்தம்
இதனால் சமூக ஒன்றுகூடலை தவிர்க்குமாறு அப்போது அரசு கேட்டுக்கொண்டதால் திருமணத்தை ஒரு மாதம் கழித்து நடத்திக்கொள்ளலாம் என பிரேமசந்திரன் -சந்திரா சந்தோஷ் ஜோடியின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். ஆனால் நிபா வைரஸ் பதற்றம் தணிவதற்குள் மணமகன் பிரேமச்சந்திரனின் ரத்த சொந்தத்தை சேர்ந்தவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணமடைந்துள்ளார். இதனால் அவர்கள் குடும்ப வழக்கப்படி ஒரு வருடம் கழித்து திருமணம் நடத்த முடிவு செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஓணம் பண்டிகை விடுமுறையில் 2-வது முறையாக திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
2-வது முறை திருமண ஏற்பாடு
அப்போது கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளப்பாதிப்பு பிரேமசந்திரன் -சந்திரா சந்தோஷ் திருமணத்தையும் பதம் பார்த்தது. வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டதால் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் அப்போதும் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டு இந்தாண்டு 2020 மார்ச் 20-ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் சொந்தபந்தங்களுக்கு கொடுக்கப்பட்டன.
கொரோனா வில்லன்
அதற்குள் கேரளாவில் கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் மூன்றாவது முறையாகவும் பிரேமசந்திரன் -சந்திரா சந்தோஷ் திருமணம் நிறுத்திவைக்கப்பட்டது. எப்படியும் மார்ச் 20-ம் தேதி பிள்ளைகளுக்கு திருமணத்தை முடித்துவிடலாம் என அந்த இளம் ஜோடியின் பெற்றோர்கள் நினைத்திருந்த நேரத்தில் கொரோனா வில்லனாக புகுந்தது.
இதனிடையே கொரோனா பதற்றம் விரைவில் தணியும் என நம்பிக்கை உள்ளதாகவும், வரும் செப்டம்பரில் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர் அந்த இளம் ஜோடியின் உறவினர்கள்.