2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா? எங்கே சொதப்பியது?
கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலம் என்றால் கேரளாதான் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். அங்குதான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனாவை கேரளா தீவிரமாக கட்டுப்படுத்தியது.
1000 கேஸ்கள் கூட தொடாமல் மிக கட்டுப்பாட்டுடன் கேரளா கொரோனாவை கட்டுப்படுத்தியது. உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு நாடுகள் கேரளாவின் இந்த சிறப்பான செயலை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
குழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி!
மீண்டும் கேஸ்கள்
இந்த நிலையில் அங்கு தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இப்படி மீண்டும் கொரோனா கேஸ்கள் ஏற்படுவது செகண்ட் வேவ் தாக்குதலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும்.
அச்சம் அதிகரிப்பு
இதனால் பலர் முன்பை விட அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது, என்கிறார்கள். தற்போது கேரளாவில் இதே தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அங்கு தினமும் 20க்கும் அதிகமாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எங்கிருந்து வந்தனர்
இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இப்படி வெளி மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் காரணமாக பலருக்கு கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் 7 சுகாதார பணியாளர்கள் உட்பட 13 பேர் மாநிலத்திற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவே முதல்முறை
கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் ஏற்படுவது இதுதான் முதல் முறை. கேரளாவில் மொத்தம் 794 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. இன்று 3 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 515 பேர் குணமாகி உள்ளனர். அங்கு மொத்தம் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பேட்டி
இன்று பாலக்காட்டில் அதிகமாக 19 பேருக்கும், கண்ணூரில் 16 பேருக்கும் கொரோனா வந்தது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள பேட்டியில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் மூலம் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகம் வருகிறது. இது எதிர்பார்த்ததுதான். மக்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தால் கண்டிப்பாக கொரோனாவை விரட்ட முடியும், என்று கூறியுள்ளார்.