17 பெண்கள்.. சைலஜா நம்பும் ஒரு டீம்.. பெரியம்மையை விரட்டிய பாட்டி.. கொரோனாவிடம் மோதும் பேத்தி!
கேரளாவில் கொரோனாவிற்கு எதிராக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அண்ட் டீம் மிக சிறப்பாக, தீவிரமாக போராடி வருகிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவிற்கு எதிராக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அண்ட் டீம் மிக சிறப்பாக, தீவிரமாக போராடி வருகிறது.
Recommended Video
சரியாக மணி அதிகாலை 2. அறையில் யாரும் இல்லை. அங்கு அமர்ந்து மறுநாள் அனுப்ப வேண்டிய பிரஸ் ரிலீசுக்காக தீவிரமாக பணிகளை செய்து கொண்டு இருந்தார் கே. கே சைலஜா. டீச்சர் என்று கேரள மக்களால் செல்லமாக அழைக்கப்படும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தினமும் தனது பணியை முடிப்பது அதிகாலை 2 மணிக்குத்தான்.
தனது டீமில் எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டு, காலையில் எல்லோருக்கும் முன், அலுவலகம் வந்து பணிகளை தொடங்குவதுதான் சைலஜாவின் தற்போதைய வழக்கம். ஒரு சிறிய அணியை வைத்துக் கொண்டு, கேரளாவில் கொரோனாவை தீவிரமாக இவர் கட்டுப்படுத்தி வருகிறார்.
செம கூல் சைலஜா
சைலஜாவை பிடிக்காத ஆட்கள், அரசியல்வாதிகள் கேரளாவில் யாரும் இருக்க முடியாது. நிஃபா வந்த போதும் சரி தற்போது கொரோனாவின் போதும் சரி, மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்து பணிகளை கவனித்து வருகிறார் சைலஜா. இவரின் தொலைபேசி எண் கேரளாவில் பல பேரிடம் உள்ளது. கொரோனா தொடர்பாக போன் செய்யும் எல்லோருக்கும் மிக கூலாக பதில் சொல்லி அவர்களின் கோரிக்கைகளை நள்ளிரவில் கூட தீர்த்து வைக்கிறார் சைலஜா.
மக்களின் ஒரே நம்பிக்கை
உலகம் முழுக்க கொரோனாவை பார்த்து அச்சப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில் கேரள மக்களின் ஒரே நம்பிக்கை சைலஜா மட்டும்தான். எங்களுக்கு டீச்சர் இருக்காங்க.. அவங்க பார்த்துப்பாங்க. நாங்க எப்போ வேணா அவங்க கிட்ட பேசலாம்'' என்று மக்கள் சைலஜாவை தங்கள் வீட்டை சேர்ந்த ஒருவராக பார்க்கிறார்கள். அங்கு இருக்கும் மிக சாதாரண குடிமகன் கூட, காங்கிரஸ், பாஜகவை சேர்ந்தவர்கள் கூட, சைலஜாவை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று கூறுகிறார்கள்.
நிஃபா எதிர்கொண்ட அதே டீம்
கேரளாவில் இருந்து நிஃபாவை மொத்தமாக விரட்டி அடித்தது சைலஜாதான். மொத்தமாக கேரளாவின் எல்லா ரிசோர்ஸ்களையம் பயன்படுத்தி, அந்த கொடிய வைரஸை விரட்டி அடித்தவர் உலக சுகாதார மையத்திடம் குட் மார்க் சான்றிதழ் கூட வாங்கினார். தற்போது அதே சைலஜா அண்ட் டீம்தான் கேரளாவில் கொரோனாவை தீவிரமாக எதிர்கொண்டு வருகிறது. இவரின் அணியில் 40 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் கொரோனாவை அங்கு எதிர்கொள்வது.
பெண்கள்தான் எல்லாம்
இதில் மொத்தம் 25 பேர் தலைமையின் கீழ் குழுக்களாக பிரிந்து, பணிகளை செய்து வருகிறார்கள். இந்த டீம்களை வழி நடத்துவதில் 17 பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலகர்கள், நிப்பாவை எதிர்கொள்ள உதவிய பெண் டாக்டர்கள், நிப்பா எப்படி கேரளாவில் தோன்றியது என்பதை புலனாய்வு மூலம் கண்டுபிடித்த பெண் டாக்டர்கள் என்று சைலஜா இந்த 17 பெண்களை பெரிய அளவில் நம்பி இருக்கிறார்.
மொத்தமாக கலக்கும் டீம்
பெண்கள் மட்டுமின்றி தனது டீமில் இருக்கும் 40 ஆயிரம் பேரையும் இவர் தனித்தனியாக கவனித்து வருகிறார். எல்லோருடைய பெயரையும் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு இவர் அவர்கள் உடன் நெருக்கமாக இருக்கிறார். தன்னுடைய பேட்டியில் எல்லாம் டீம் டீம் என்று, தனது அணி குறித்து பேசுவதை சைலஜா வழக்கமாக வைத்துள்ளார். இது தனி நபரின் போராட்டம் அல்ல, எங்கள் குழுவின் போராட்டம்..இது நம் மக்களின் போராட்டம் என்பதை சைலஜா உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார்.
வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறார்கள்
தனது அணியிடம் மட்டுமின்றி மக்களிடமும் இவர் வெளிப்படையாக இருக்கிறார். கொரோனா குறித்து உடனுக்குடன் அப்டேட்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில்தான் 2000+ பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அங்கு 60 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வீட்டிற்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இதற்கு எல்லாம் சைலஜாவின் தீவிர முயற்சியும், திட்டமிடலும்தான் காரணம்.
ஆதரவிற்கு குவியும் மக்கள்
இவரின் செயலை பார்த்து அம்மாநில மக்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள். அவரின் அணியில் இருக்கும் 40 ஆயிரம் பேரை தவிர 10 ஆயிரத்திற்கும் மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், மருத்துவர்கள், வயதானவர்கள் என்று பலர் தற்போது வாலன்டியராக சைலஜாவிற்கு உதவி செய்ய களமிறங்கி இருக்கிறார்கள். அதேபோல் கேரளாவில் டாக்சி ஓட்டும் பலர் தற்போது தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக சொந்த செலவில் டீசல் போட்டு வண்டி ஓட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் இடையில் என்ன செய்கிறார்
தனது மருத்துவ பணிகள், கொரோனா எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய தினசரி சுகாதாரத்துறை பணிகள், தொகுதி பணிகளை தீவிரமாக செய்து வருகிறார் சைலஜா. தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார், கட்டுரை எழுதுகிறார். இது போக தன்னை வந்து சந்திக்கும் பெண்களுக்கு தனியாக உதவிகளை செய்கிறார். தனது வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்... பெண்களால் பிரஷரை தாங்க முடியாது என்னும் so called ஆண் chauvinistic கொள்கைகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்.
சைலஜா என்ன சொன்னார் தெரியுமா?
தனது கொரோனா போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், என்னுடைய டீம்தான் இந்த போராட்டத்தை முன்னோக்கி செல்ல வைக்கிறது. எனக்கு பயம் இருக்கிறது. ஆனால் அதை நான் வெளியே காட்ட மாட்டேன். நான் வெளியே பயப்பட்டால் மக்களுக்கு யார் தைரியம் சொல்வது. நாங்கள் வலுவாக இருக்கிறோம். இதை நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வோம். எல்லோரும் வேலை செய்வோம்.. நிப்பாவை விரட்டியது போல இதையும் விரட்டுவோம் என்று கூறுகிறார்.
பாட்டியின் வரலாறு
இவர் மட்டுமல்ல இவரின் குடும்பமே மக்களுக்காக சேவை செய்த குடும்பம்தான். இவர் அப்பா தீவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர். தனது ஊரில் அப்போதே இவர் நலப்பணிகளை செய்துள்ளார். இவரின் பாட்டி எம்கே கல்யாணிதான் சைலஜாவின் ரோல் மாடல். அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கல்யாணிதான் அவர்கள் ஊரில் சின்னம்மை என்னும் கொடிய நோயை விரட்டி அடித்தது. மக்கள் எல்லோரும் அச்சத்தில் இருந்த போது அவர்களை ஒன்று திரட்டி சின்னம்மையை விரட்டியவர் என் பாட்டி.. அவரின் வலிமையில் பாதி இருந்தால் கூட எனக்கு போதும் இதை எதிர்கொள்வேன் என்று சைலஜா கூறியுள்ளார்.
கம்யூனிச வரலாறு
சைலஜா தன்னுடைய கல்லூரி பருவத்தில் இருந்தே கம்யூனிச கொள்கை கொண்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கல்லூரியில் இருந்தே இருக்கிறார்.. பாலசி ராஜா என்எஸ்எஸ் கல்லூரியில் படித்த இவர், தற்போது கொத்துபரம்பா தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். அடுத்த கேரளா சட்டசபை தேர்தலில் இவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அம்மாநில சிபிஎம் கட்சி திட்டமிட்டு வருகிறது.