மலையாளிகள் எந்த மூலையில் இருந்தாலும் உதவுவோம்.. பினராயி கொண்டு வந்த "ஹெல்ப் டெஸ்க்" பிளான்.. செம!
கொரோனா காரணமாக வெளிநாட்டில் மலையாளிகள் பலியாகி வரும் வேளையில், ஐந்து நாடுகளில் உதவி மையங்களை அமைக்க கேரளா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக வெளிநாட்டில் மலையாளிகள் பலியாகி வரும் வேளையில், ஐந்து நாடுகளில் உதவி மையங்களை அமைக்க கேரளா மாநில அரசு முடிவு செய்துள்ளது. மலையாளிகளுக்கு வெளிநாட்டில் மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் இந்த முடிவை அரசு செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளாதான். அங்குதான் சீனாவின் வுஹனில் இருந்து திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. பிப்ரவரி 15ல் இருந்து கொரோனாவிற்கு எதிராக கேரள அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் முழுக்க கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கேரளாவில் தீவிரமாக கொரோனா பரவியது. இதை தீவிரமாக எதிர்கொள்ள கேரள அரசு பல்வேறு பணிகளை செய்தது.
வேகமான டெஸ்ட்
முக்கியமாக கேரளாவில் மிக அதிகமாக சாம்பிள் சோதனைகளை செய்தது. இந்தியாவிலேயே அதிகமாக கேரளாவில்தான் 16 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு 345 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த கேரளா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளது. இதற்கு வேகமாக டெஸ்ட் முறைகள் காரணம்.
எத்தனை பேருக்கு கொரோனா
கடுமையான கட்டுப்பாடுகள், தினசரி சோதனைகள், தனிமைப்படுத்துதல் இதற்கு காரணம். கேரளாவில் மொத்தம் நேற்று 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. அங்கு 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 84 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 259 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர்.
வெளிநாடு கவனம்
இந்த நிலையில் தங்கள் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ள கேரள அரசு தற்போது வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகள் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. மலையாளிகள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் பணியாற்றி வருகிறார்கள். இப்படி வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகள் 24 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர்.
வெளிநாட்டில் உதவி மையம்
துபாய், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வெளிநாட்டில் மலையாளிகள் இப்படி பலியாவது அம்மாநில அரசுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இதனால் இதற்காக ஐந்து நாடுகளில் உதவி மையங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உதவி மையங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதல் சோதனை மையம்
முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. Non Resident Keralites Affairs எனப்படும் நோர்கா (NORKA). என்ற அரசு அமைப்பு மூலம் இந்த உதவி மையம் செயல்படுத்தப்படும். மருத்துவ உதவி தொடங்கி நாடு திரும்ப உதவி வரை இந்த அமைப்பு மூலம் அரசு செய்து தரும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக உதவி செய்வோம்
எங்களுக்கு தினமும் பல்வேறு நாட்டில் உள்ள மலையாளிடம் இருந்து போன் வருகிறது.எங்களுக்கு உதவுங்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் காப்பது நம் கடமை. அதை இந்த மாநில அரசு கண்டிப்பாக செய்யும். இதற்காக பல்வேறு நாட்டின் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருக்கும், மலையாளிகளுக்கு கண்டிப்பாக உதவுவோம், என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.