800 பேரை தேடி பிடியுங்கள்.. கொரோனாவிற்கு எதிராக 'காண்டாக்ட் டிரேஸ்' முறை.. கேரளா எடுத்த பழைய ஆயுதம்
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு 'காண்டாக்ட் டிரேஸ்' முறை எனப்படும் மருத்துவ சோதனை முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்; கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு 'காண்டாக்ட் டிரேஸ்' முறை எனப்படும் மருத்துவ சோதனை முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.
நிஃபா வைரஸை தொடர்ந்து கேரளாவில் தற்போது கொரோணா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.தற்போது கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 304 பேர் பலியாகி உள்ளனர். 14000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு என்ன
கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கேரளா முழுக்க பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனைகள் நடத்தி வருகிறது. கேரளாவில் நிஃபா வைரஸை கட்டுப்படுத்த அவர்கள் காண்டாக்ட் டிரேஸ் (contact trace) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே காண்டாக்ட் டிரேஸ் முறையைத்தான் கேரளா அரசு பயன்படுத்தபடுகிறது. இது மிகவும் கடினமான, அதே சமயம் தீவிரமான முறையாகும்,
தொடுதல் முறை
பொதுவாக நிஃபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஏ என்ற நபர் சீனாவில் இருந்து கேரளா திரும்புகிறார்.
யார் எல்லாம்
அவருக்கு கேரளா வந்த ஒரு வாரம் கழித்து கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஒரு வார இடைவெளியில் அவர் யாருடன் எல்லாம் பழகினார், யாருடன் நெருக்கமாக இருந்தார், யாருடன் பேசினார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம் சோதனை நடத்த வேண்டும். இதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது அல்லவா. ஆனால் கேரளாவில் நிஃபா வைரஸை இந்த காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம்தான் கட்டுப்படுத்தினார்கள். இப்படித்தான் நோயாளிகளை அம்மாநிலத்தில் தனிமைப்படுத்தினார்கள்.
எப்படி எல்லாம்
தற்போது அதே காண்டாக்ட் டிரேஸ் முறையை கேரளாவில் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு கொரோனா தாக்கப்பட்ட பெண் கடந்த இரண்டு வாரத்தில் சந்தித்த 800 பேரை காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம் தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆம், அந்த ஒரு பெண் சந்தித்த உறவினர், நண்பர்கள் உட்பட 800 பேரை தேடி பிடித்து சோதனை செய்து வருகிறார்கள். இந்த 800 பேருக்கும் அவர்கள் மருத்துவ சோதனை செய்து உள்ளனர். இதற்காக அங்கு தனிப்படையே அமைத்து உள்ளனர்.
அடுத்த நபர்
இதேபோல்தான் தற்போது அடுத்த நபர் தொடர்பு கொண்ட உறவினர்களையும் தேடி வருகிறார்கள்.இந்த காண்டாக்ட் டிரேஸ் கேரளாவில் பெரிய அளவில் பலன் அளித்தது. நிஃபாவை கட்டுப்படுத்த காண்டாக்ட் டிரேஸ் முறை பெரிதும் உதவியது. இதேபோல் கொரோனாவிற்கு எதிராக காண்டாக்ட் டிரேஸ் முறை பயன்படும் என்று அம்மாநில அரசு நம்புகிறது. இதற்காக இரவு பகல் பாரமால் அம்மாநில அதிகாரிகள் உழைத்து வருகிறார்கள்.