கேரளாவில் மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வதை தடுக்க அதிரடி- மருத்துவர் பரிந்துரைத்தால் மதுபானம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் படுதீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கும் கூட நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் இருக்கின்றன. ஆனால் கேரளாவில் மதுகுடிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட கேரளாவில் மதுகுடிக்கமுடியாத விரக்தியில் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பது அந்த மாநில அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனைத் தடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார்.
இதனடிப்படையில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் வருவோருக்கு மதுபானம் வழங்கலாம் என கலால்துறையினருக்கு பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மருத்துவர் சங்கம் எதிர்ப்பு
ஆனால் கேரளா முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்படியான பரிந்துரை வழங்குவது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது; மருத்துவர்களின் உரிமங்களை எதிர்காலத்தில் ரத்து செய்யப்படுவதற்கு இது ஒருவாய்ப்பாகிவிடும் என கூறியுள்ளனர்.