சபரிமலை: நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை இல்லை- சான்றிதழ் கையில் இருந்தால் மட்டும் அனுமதி
நிலக்கல்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கையில் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே நிலக்கல்லில் இருந்து அனுமதிக்கப்படுகின்றனர்; நிலக்கல்லில் இன்று கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்கின்றன தகவல்கள்.
சபரிமலையில் மண்டல பூஜை முடிவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜை காலங்களில் தினசரி 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.
இந்த உத்தரவுக்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நிலக்கல்லில் இன்று காலை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கல்லில் வாகனத்தை நிறுத்துவதற்கு பக்தர்கள் கையில் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே பம்பை வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா இல்லை என்கிற எஸ்.எம்.எஸ்., ஸ்கேன் இமேஜ் போன்ற ஆவணங்களை ஏற்கவில்லை.
ஏற்கனவே கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் மண்டல பூஜைக்கு மிக குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சபரிமலை சீசன் வருவாய் வெகுவாக குறைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.