கொரோனா: எல்லையில் பரிதவிப்பு... நள்ளிரவில் முதல்வருக்கு போன்.. சட்டென மீட்கப்பட்ட கேரளா பெண்கள்
திருவனந்தபுரம்: கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள், லாக்டவுன்கள் பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் ஏராளம்.
Recommended Video
வட மாநிலங்களில் லாக்டவுன் அமலுக்கு வந்ததால் நடைபயணமாக சொந்த மாநிலம் திரும்பியவர்கள் ஏராளம்.. குஜராத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு குடும்பத்தோடு 300 கி.மீ. பாதயாத்திரை போயிருக்கிறார்கள்..
டெல்லியில் என்னதான் உணவும் தங்க இடமும் கிடைத்தாலும் சும்மா உட்கார முடியாமல் பொடிநடையாக உத்தரப்பிரதேசத்துக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்ட இளைஞர்கள் ஏராளம். இப்படியான சம்பவங்களில் கேரளா-கர்நாடகா எல்லையில் தத்தளித்த 14 பெண்களுக்கு நேர்ந்த அனுபவமும் ஒன்று.
கொரோனா விபரீதம்: ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ
கேரளா நோக்கி பயணம்
கொரோனாவின் தாக்கம் பல மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து மாநில அரசுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதனால் ஹைதராபாத்தில் வேலை செய்த கேரளா 14 பெண்கள், ஒரு டெம்போ டிராவலரை பிடித்துக் கொண்டு ஊர் கிளம்பினர். அந்த வாகனத்தின் ஓட்டுநர் கோழிக்கோட்டில் இறக்கிவிடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
லாக்டவுன் அறிவிப்பால் தவிப்பு
இதனை நம்பித்தான் அந்த பெண்களும் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால் வரும் வழியில் 21 நாட்கள் லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்த தகவல் டிரைவருக்கும் தெரியவந்திருக்கிறது. இதற்கு மேல் வாகனத்தை இயக்குவது சரியானது அல்ல முடிவெடுத்த டிரைவர் 14 பெண்களையும் கேரளா- கர்நாடகா எல்லையிலேயே இறக்கிவிடுகிறார். அப்போது நள்ளிரவு நேரம்.
நள்ளிரவில் முதல்வருக்கு போன்
அங்கிருந்து சொந்த ஊருக்கு எப்படி திரும்புவது என தெரியாமல் பெண்கள் அனைவரும் தவியாய் தவித்து போயினர். அப்போது அவர்களில் ஒரு பெண், கேரளா முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார். போன் 2 ரிங்குகள் கூட போயிருக்காது.. போனை எடுத்து எதிர்முனையில் பேசியவர் முதல்வர் பினராயி விஜயன்.
நள்ளிரவில் மீட்கப்பட்ட பெண்கள்
இதை நம்பவே முடியாத அந்த பெண்கள் தங்களது துயரத்தைப் பகிர்ந்துள்ளனர். இதனை பொறுமையாக கேட்ட முதல்வர் பினராய் விஜயன் அப்பகுதி ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரது தொலைபேசி எண்களை கொடுத்து பேச சொல்லியிருக்கிறார். அவர்களுக்கும் போன் செய்து உடனே அந்த பெண்களை மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இதன்பின்னர் 14 பேரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த தகவலை 14 பேரில் ஒருவரான ஆதிரா ஷாஜி என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.