கேரளா: மே இறுதி வரை விமான போக்குவரத்து இல்லை- தேர்வுகளுக்காக மட்டும் பள்ளிகளை திறக்க பரிந்துரை
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று நோய் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் கேரளாவில் மே இறுதி வரை விமானப் போக்குவரத்து சேவைகளை இயக்குவதில்லை; தேர்வுகளுக்காக மட்டுமே பள்ளிகளைத் திறப்பது என அம்மாநில அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கேரளாவில்தான் கொரோனா தொற்று நோய் தாக்கம் முதலில் இருந்தது தெரியவந்தது. தொடக்கத்தில் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனால் மாநில அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டது. கேரளாவில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எபிசென்டராக மாறும்.. டெல்டாவில் தீவிரம் அடையும் கொரோனா.. மூடப்பட்ட கிராமங்கள்.. நிலை என்ன?
கேரளா அரசின் குழு
மேலும் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய முன்னாள் தலைமைச் செயலாளர் கே.எம். ஆபிரகாம் தலைமையிலான 17 பேர் கொண்ட குழு ஒன்றையும் முதல்வர் பினராயி விஜயன் அமைத்திருந்தார். இந்த குழு ஊரடங்கு மற்றும் லாக்டவுனை தளர்த்துவது குறித்த பரிந்துரைகளை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
விமானம், ரயில் சேவை ரத்து
அதில், முதல் கட்டமாக மே மாதம் இறுதிவரை விமானப் போக்குவரத்து சேவைகளை இயக்க வேண்டாம் என்றும் தேவைப்பட்டால் தேர்வுகளுக்காக மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் ரயில் சேவைகளையும் நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் வெளிமாநிலத்தவரை கேரளாவுக்குள் அனுமதிக்க தடை விதிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிபந்தனைகள்
அத்துடன் வீட்டை விட்டு ஒரே ஒருநபர் மட்டுமே வெளியே வர வேண்டும்; அதுவும் முகக்கவசம் அணிந்தபடி மட்டுமே வெளியே வர வேண்டும்; அவரும் கூட 3 மணிநேரத்துக்கு மேல் வெளியே நடமாடக் கூடாது; வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம். 2-வது கட்டமாகத்தான் பேருந்துகள் சேவைகளை குறைந்த அளவு இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாம்.
பினராயி விஜயன் பதில்
இதனிடையே ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு தெரிவிக்க இருக்கும் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதனடிப்படையில்தான் மாநில அரசும் முடிவுகளை மேற்கொள்ளும் என்றார்.