சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா - தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதி
சபரிமலை ஐயப்பனை காண இருமுடி கட்டி சென்ற பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அந்த பக்தர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யச் சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பக்தர் உடனடியாக பத்தினம்திட்டாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்ட பக்தருடன் வேறு பக்தர்கள் யாரும் வரவில்லை. தமிழகத்தில் இருந்து தனியாக சபரிமலைக்கு சென்றுள்ளார். இருப்பினும் வரிசையில் நின்ற பிற பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் இருமுடி கட்டி தரிசனம் செய்ய செல்வார்கள். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வது வழக்கம். சித்திரை முதல் பங்குனி வரை மாதந்தோறும் 1ஆம் தேதி நடைதிறந்து பூஜை செய்வார்கள். அந்த காலத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர் ஐப்பசி மாதம் பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்த 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனை சர்டிபிகேட் வைத்திருப்பது அவசியம். மலைக்கு வரும் பக்தர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா பாதித்தவர்கள், இதய ஆபரேஷன் செய்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் விட்டால் என்ன? இப்படி ஒரு ஆலோசனை!
இருமுடி கட்டி ஐயப்பனை காண வந்த தமிழக பக்தர் ஒருவருக்கு சபரிமலைக்கு வந்த பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பத்தினம்திட்டாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்தனர். அந்த பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை செய்து சர்டிபிகேட் கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே மட்டுமல்லாது கோவில் நிர்வாகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.