சிபிஎம் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கோடியேரி பாலகிருஷ்ணன்.. 'முதல்வரின் வலது கரம்..' என்ன காரணம்?
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளரும், முதல்வர் பினராயி விஜயனுக்குப் பிறகு கட்சியில் நம்பர் 2 இடத்தில் இருப்பவருமான, கோடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) கன்வீனர் பதவியில் உள்ள விஜயராகவனுக்கு தற்காலிகமாக, இந்த பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையை மேற்கோள் காட்டி பாலகிருஷ்ணன் விடுப்புக்கு விண்ணப்பித்ததாக மார்க்சிஸ்ட் கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இருப்பினும், அந்த நேரத்தில், அவர் தனது பதவியில் இருந்து விலகவில்லை. பாலகிருஷ்ணன் கட்சி விவகாரங்களில் இருந்து எவ்வளவு காலம் விலகி இருப்பார் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
பெங்களூரில் போதைப் பொருள் வழக்கில் கோடியேரியின், இளைய மகன் பினீஷ் கோடியேரி அமலாக்க இயக்குநரகத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கோடியேரி பாலகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் பாக் தாக்குதல்.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..இந்தியாவின் பதிலடியில் 7-8 பாக் வீரர்கள் பலி
பினீஷ் கோடியேரி, நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வரும் டிசம்பரில் 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், அந்த மாநில அரசியலில் அரையிறுதி போட்டி என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணன் விலகல் இணைத்து பார்க்கப்படுகிறது.