வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு திடீர் உடலநலக் குறைவு... மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திடீர் உடல் நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர்.
சுஜித்தை மீட்கும் பணி தீவிரம்.. புதிய ரிக் மிஷின் மூலம் தோண்டப்படும் குழி.. இன்னும் 5 மணி நேரம்!
முன்னாள் முதல்வர்
கேரள அரசியலில் முக்கியத் தலைவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டவர் வி.எஸ்.அச்சுதானந்தன். அண்மைக்காலத்தில் வயது மூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
முதுபெரும் தலைவர்
வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றும் அவர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், தாமாக விரும்பி சென்று அச்சுதானந்தனை சந்தித்து வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அனுமதி
அச்சுதானந்தனுக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவரை அவரது குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யூ.டி.ராயல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அச்சுதானந்தனுக்கு மிகக் கடுமையான தலைவலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சி.டி.ஸ்கேன்
அச்சுதானந்தனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளதை கண்டறிந்து உடனடியாக அதை சீர்படுத்தினர். மேலும், சி.டி.ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டதில் அச்சுதானந்தனின் மூளையில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கண்காணிப்பு
இதையடுத்து அச்சுதானந்தனை தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள் குழு அவருக்கு தேவையான சிகிச்சைகளை முழு வீச்சில் வழங்கி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அச்சுதானந்தனின் குடும்பத்தினர் ஸ்ரீ சித்ரா மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.