மகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மனோகரன் என்பவர், தனது மகனுக்கு ஆடம்பர திருமணம் நடத்தியதால் அவர் கட்சியிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் சி.வி.மனோகரன். இவர் அந்தப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார்.
அண்மையில் தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைத்த அவர், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார் என புகார் எழுந்ததால் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கட்சி நடவடிக்கை
ஆலப்புழா அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதி சி.பி.எம்.(ஐ) நிர்வாகியாக இருந்த மனோகரன் கடந்த வாரம் தனது ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த திருமணம் இசைக்கச்சேரிகளுடன் வெகு விமர்சிசையாக நடந்துள்ளது. இதையடுத்து இது குறித்த புகார் மற்ற நிர்வாகிகள் மூலம் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
6 மாத காலம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள போதும் அந்தக் கட்சி நிர்வாகிகளால் பெரியளவில் சம்பாதிக்க முடியாத நிலையே தொடர்கிறது. காரணம் அந்தளவு கண்டிப்பும், கொள்கையும் அந்தக் கட்சியில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக மனோகரன் செயல்பட்டதால் அவரை 6 மாதகாலம் இடைநீக்கம் செய்து மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமண ஏற்பாட்டாளர்
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மனோகரன், தனது மகன் வெட்டிங் பிளானர் எனப்படும் திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதால், அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டனர். இதில் தனது தலையீடோ, பங்களிப்போ என எதுவும் இல்லாதபோது தன்னை கட்சியில் இருந்து நீக்கியது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர்
மனோகரனின் விளக்கத்தை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமை, திருமண விழாவில் வைக்கப்பட்ட டி.ஜே. பார்ட்டியால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டது என்றும், அதனை ஈடுகட்டுவது எளிதான காரியம் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.