இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயகருக்கு கொலை மிரட்டல் கடிதம்.. திருவனந்தபுரத்தில் பரபரப்பு
திருவனந்தபுரம்: இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் (75). இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
இவருக்கு 2 தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருந்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மாதவன் நாயர் கேரள போலீஸில் புகார் அளித்தார்.
இந்த கடிதம் குறித்து முதலில் மறுத்த மாதவன் நாயர், கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பெயரில் வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.