மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு
மூணாறு: மூணாறு பெட்டிமுடியில் உள்ள ஆற்றின் கரையில் ஒதுங்கிய 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை கொட்டி வருவதால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மூணாறு அருகே பெட்டிமடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவோரின் குடியிருப்புகள் அப்படியே பூமிக்குள் புதைந்தன. இந்த சம்பவத்தில் இது வரை 43 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
மூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்!
அஞ்சும் நிலை
சுமார் 80 பேர் மண்ணில் புதைந்திருப்பர் என அஞ்சப்படுவதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை சுமார் 4 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. நிலச்சரிவில் தங்கள் உறவினர்கள் சிக்கியதை அறிந்த தமிழகத்தின் கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள மக்கள் சாரை சாரையாக கேரளாவுக்கு சென்ற வண்ணம் உள்ளார்கள்.
4 பேரின் உடல்கள்
இந்த நிலையில் கனமழை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இன்று வானிலை சற்று தெளிவாக உள்ள நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கின. அப்போது ஒரு ஆற்றின் கரையோரம் 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துவிட்டது.
சகதி
இன்றுடன் மீட்பு பணியை முடிக்க குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் வானிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையே உள்ளது. மழை பெய்தவுடன் தோண்டிய பள்ளங்களில் மீண்டும் தண்ணீரும் சகதியும் சேர்ந்துவிடுகிறது. மழை விட்டவுடன் மீண்டும் அந்த தண்ணீரையும் சகதியையும் வெளியேற்றுவதுமாக உள்ளது.
ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
மேலும் ஆற்றிலும் சிலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறும் நிலையில் ஆற்றில் தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
ஆனால் ஆற்றிலும் மழை பெய்ய பெய்ய நீர் மட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு கயிறு கட்டி வருவது மிகவும் கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.