திடீரென கோயில் வளாகத்துக்குள் நுழைந்த "பபியா"... 70 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் பரபரப்பு
கோயிலுக்குள் திடீரென நுழைந்த முதலை பபியா
திருவனந்தபுரம்: அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 வருஷமாக வசித்துவரும் பபியா என்ற முதலை, முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்ததாம்!
கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது... இங்குதான் புகழ்பெற்ற அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளம் உள்ளது.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போலவே அமைப்பு கொண்ட இக் கோயில் கேரளாவில் ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயிலாகும். இந்த கோயில் குளத்தில் ஒரு முதலை 70 வருஷமாக வசித்து வருகிறது.. அந்த முதலையின் பெயர் பபியா.
இந்த கோயில் உருவான காலம் முதலே அந்த முதலைதான் பாதுகாத்து வருகிறதாம்.. ஒரு முதலை இறந்து விட்டால் இன்னொரு முதலை அந்த இடத்திற்கு வந்து விடும்.. அதனால் எப்போதுமே ஒரே ஒரு முதலைதான் இங்கு இருக்கும்.. ஒன்றுக்கும் மேற்பட்ட முதலைகளை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
பபியா என்ற முதலை ரொம்ப சாதுவானது.. யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாது.. ஏரியில் உள்ள மீன்களை கூட சாப்பிடுவதில்லையாம்.. பூஜை செய்யப்பட்ட வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே சாப்பிடுகிறது.. அந்த சாப்பாட்டுக்கு முசலி நெய்வேத்யம் என்று பெயர்.. அவல், வெல்லம், வாழைப்பழங்கள் கலந்த சாப்பாடுதான் தரப்படுகிறது என்று ஏற்கனவே செய்திகள் பல வந்துள்ளன. இப்போது பபியா பற்றி மற்றொரு செய்தி வந்துள்ளது.
முதன்முறையாக இந்த பபியா கோயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட்டதாம்.. 70 வருஷமாக யாருமே பார்த்திராத முதலை, திடீரென வந்ததாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் கூறியுள்ளார்.. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, திரும்பவும் குளத்துக்கே சென்றுவிட்டதாம்.