கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இதுதான்.. டாக்டர்கள் எதிர்ப்பால்.. கேரள குடிமகன்கள் சோகம்
திருவனந்தபுரம்: மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்புக்கு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்க அறிவுறுத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மன அழுத்ததில் மதுப்பிரியர்கள் உள்ளார்கள். கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்த முடியாமல் விரக்தியில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து சிறிது நேரமாவது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பரிசீலித்த முதல்வர் பினராயி விஜயன், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர கவுன்சிங்கும் நடத்தப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார்.
மதுவுக்கு டாக்டர்கள் பரிந்துரை என்ற முதல்வரின் பேச்சுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது வழங்க நாங்கள் அறிவுறுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
இதனால் மதுப்பிரியர்கள் கேரளாவில் லாக்டவுன் முடியும் வரை , அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மதுக்கடைக்கு சென்று மதுவாங்கி அருந்த வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. இதனால் வேதனை அடைந்துள்ளனர்.