தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் பெயர்.. ஸ்வப்னாவை கட்டாயப்படுத்திய அமலாக்கத் துறை?
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருக்கிறது என கூறுமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறை வற்புறுத்தியதாக போலீஸ் எஸ்கார்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாள்தோறும் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் உதவியுடன் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் , கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் கடத்தியதாக வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் பெயரை ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே என் மீது போடப்படும் பழி என விசாரணை அமைப்புகள் மீது பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி (எஸ்கார்ட்), முதல்வர் பினராயி விஜயனின் பெயரை கூறுமாறு ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டார் என கைப்பட எழுதிய அறிக்கையில் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடுத்து கேரளா தான்..பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்
அந்த பெண் அதிகாரி கூறுகையில் அமலாக்கத் துறை ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்திய அறையில் நான் இருந்தேன், அப்போது ஆடியோவில் இருப்பது போன்று முதல்வரின் பெயரை கூறுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். நான் அங்கிருந்த போது ஸ்வப்னாவிடம் வற்புறுத்தி ராதாகிருஷ்ணன் சார் கேள்வி கேட்டார் என பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அந்த பெண் கூறும் ராதாகிருஷ்ணன் அமலாக்கத் துறை இயக்ககத்தின் உதவி இயக்குநர் பி ராதாகிருஷ்ணனா என்பது தெளிவாக தெரியவில்லை.