வளைகுடா நாடுகளின் பயண தடையை சமாளிக்க.. உஸ்பெகிஸ்தான் வழியாக.. ஓமனுக்கு புதிய விமான சேவை
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கான விமானச் சேவைக்குத் தடை விதித்துள்ள நிலையில், கேரளாவிலிருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக ஓமனுக்கு செல்லும் விமானச் சேவையை டிராவல்ஸ் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகளும் இந்தியா உடனான விமான போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளன.
செம ஷாக்.. கேரளாவில் வெறும் 10 நாட்களில்.. 1000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
அதேபோல வளைகுடா நாடுகளும் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்தன. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் வழியாக ஓமன்
இதன் காரணமாக இந்தியப் பயணிகள் நேபாளம் மற்றும் மாலத்தீவு வழியாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றனர். கொரோனா மோசமடைந்ததைத் தொடர்ந்த இந்தியாவுடனான சேவைக்கு அந்த நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தன. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக ஓமனுக்குச் செல்லும் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஆல்ஹின்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது.
பயணம் எப்படி
இதில் பயணிகள் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு ஓமன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், இது குறித்து ஆல்ஹின்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில்," பல பயணிகள் வளைகுடா நாடுகளுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாகச் செல்கின்றனர். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
செலவு எவ்வளவு
தற்போது பஹ்ரைன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு இந்தியர்கள் செல்கின்றனர். ஆனால் பஹ்ரைனில் விசா கிடைப்பது சிரமம், அதற்கு மட்டும் 1.1 லட்ச ரூபாய் செலவாகும். அதேநேரம் உஸ்பெகிஸ்தான் வழியாக வளைகுடா நாடுகளுக்குச் செல்ல பயண டிக்கெட், 14 நாட்கள் உஸ்பெகிஸ்தானில் தனிமைப்படுத்த ஹோட்டல் செலவு என எல்லாம் சேர்த்து 1.35 லட்சம்தான் ஆகிறது. தற்போது வரை இந்தப் பயணத்திற்கு 20 பேர் முன்பதிவு செய்துள்ளனர்" என்றார்.
பெரும் பயணம்
கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து ஓமன் செல்ல மொத்தமே 2324 கிலோமீட்டர் தான். ஆனால், இந்தப் பயண தடை காரணமாக 3,600 கிலோமீட்டர் உஸ்பெகிஸ்தான் சென்று, அங்கிருந்து மேலும் 2,100 கிலோமீட்டர் பயணித்து ஓமனுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.