பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை.. கோர்ட்டில் கதறி அழுத நடிகை! அரசு தரப்பு பரபர வாதம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையின் கதறி அழும் சூழலுக்கு தள்ளப்பட்டார். வழக்கு விசாரணையின் போது நம்பிக்கை போய்விட்டதாகவும் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் சார்பில் ஹைகோர்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பிரபல மலையாள நடிகை கடந்த 3 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனி கோர்டில் விசாரணை வருகிறது.
பெண் நீதிபதி தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் விசாரணையை நிறுத்தி வைத்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உயர்நீதிமன்றம்
அரசு தரப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணையை 16ம் தேதி (நேற்று) வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.. நேற்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
அவமானப்படுத்தும் கேள்வி
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றம் துவக்கம் முதல் இந்த வழக்கில் ஒருதலைபட்சமாக நடக்கிறது. பெண் நீதிபதியாக இருந்தபோதிலும் அவரால் பாதிக்கப்பட்ட நடிகையின் நிலையை புரிந்து கொள்ள இயலவில்லை . வழக்கு விசாணையின் போது நடிகையை அவமானப்படுத்தம் வகையில் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளை கேட்டார். அதை தடுக்க நீதிபதி முயற்சிக்கவில்லை. அரசு தரப்பு, அதை சுட்டிகாட்டியபோதும் அவர் ஏற்க மறுத்தார்.
கதறி அழுத நடிகை
நீதிமன்றத்தில் பலமுறை நடிகை கதறி அழும் சூழலும் ஏற்பட்டது. இதனால் விசாரணை மீதான நம்பிக்கை போய்விட்டது. எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து விசாரணையை 20ம் தேதிவரை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்..
போலீசில் புகார்
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான விபின்லால் என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றக்கோரி தனக்கு மிரட்டல் வருவதாக கேரள மாநிலம் பேக்கல்போலீசில் அண்மையில் புகார் அளித்துள்ளார். தன்னை மிரட்டியது ஆளும் கட்சி எம்எல்ஏ கணேஷ்குமாரின் உதவி செயலாளர் பிரதீப் குமார் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக விசாரிக்க பிரதீப் குமாருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.