வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்
Recommended Video
திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் அவர் குடும்பத்தார் பெரும் தீ விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக, விளங்கியவர் ஸ்ரீசாந்த். ஆனால் அவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த இந்திய கிரிக்கெட் வாரியம், அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதித்தது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது. எனவே அடுத்த வருடம் முதல் அவர் கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஸ்ரீசாந்த் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஸ்ரீசாந்த்தின் வீடு உள்ளது. இங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்ரீசாந்த் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்க அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
— Sreesanth (@sreesanth36) August 24, 2019
அதேநேரம், வீட்டின் முன்பக்க அறை முற்றிலும், எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வீட்டில்தான் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.