சிறுத்தையை கொன்று... இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று அதனை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 57 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மங்குளம் மலைத்தொடரின் முனிப்பாரா பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சிறுத்தையை வேட்டையாடியதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் பி.கே. வினோத் என்பவரின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிறுத்தையின் தோல், பற்கள், தாடை எலும்புகள், நகங்கள் மற்றும் அதன் இறைச்சி இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வினோத் உள்பட 5 பேர் சிறுத்தையை கொன்று அதன் உடல் பாகங்களை விற்பனை செய்ய முயன்றதும், சிறுத்தையின் இறைச்சியை அவர்கள் சமைத்து சாப்பிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த வினோத், வி.பி.குரியகோஸ் (74), சி.எஸ்.பினு (50), சாலி குஞ்சப்பன் (54), வின்சென்ட் (50) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 57 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.