கேரள காங்கிரசிலும் வெடித்தது உட்கட்சி பூசல்.. தேசிய காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் ராஜினாமா!
திருவனந்தபுரம்: பஞ்சாப் காங்கிரசை தொடர்ந்து கேரள காங்கிரசிலும் தற்போது உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம். சுதிரன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்!
இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதிக கோஷ்டி மோதல் கொண்ட கட்சி எது? என்று கேட்டால், கேள்வி கேட்டு முடிப்பதற்குள் காங்கிரஸ் என்று சட்டென்று பதில் வரும். ஆம்.. காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டி மோதலையும் பிரிக்க முடியாது.
பஞ்சாப் கூத்து
சமீபத்தில் பஞ்சாப் காங்கிரசில் நடந்த கேலிக்கூத்து நாடே அறியும். அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் கடுமையாக வெடித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்குவுக்கும், முதல்வராக இருந்து வந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே நீண்ட வருடங்களாக நிலவி வந்த பனிப்போர் கடுமையாக வெடித்தது. கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் வந்ததால் வேறு வழியின்றி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங்.
ராஜினாமா
இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம். சுதிரன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். கடந்த வாரம் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து வி.எம். சுதிரன் ராஜினமா செய்தார்.
உட்கட்சி பூசல்
அடுத்தடுத்து இரு பதவியில் இருந்து விலகிய காரணத்தை வி.எம்.சுதிரன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேசிய காங்கிரஸ் அளவில் மற்றும் மாநில காங்கிரஸ் அளவில் வி.எம்.சுதிரன் பேச்சுக்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இது ஒருபுறமிருக்க கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சதீஷனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் வி.எம். சுதிரன் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
இரு கோஷ்டிகள்
கேரள காங்கிரஸ் சதீஷன் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் தரப்பில் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகள் குறித்து கட்சியின் வி.எம். சுதிரன் தேசிய தலைமைக்கு தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பியிருந்தார். எனினும், அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொண்டர்கள் கோரிக்கை
இதனால் விரக்தி அடைந்த வி.எம். சுதிரன், முக்கியமான பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. டெல்லி காங்கிரஸ் தலைமை உடனடியாக தலையிட்டு உட்கட்சி பூசலை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.