கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...!
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் சுற்றளவுக்கு ஜங்க் புட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜங்க் புட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதேபோல் பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் அலைபேசி பயன்படுத்தவும் ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடல் நலனுக்கு பாதிப்பு
ஜங்க் புட்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை யாரும் கேட்பதாக தெரியவில்லை. தீங்கை விலை கொடுத்து வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில், கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை போடப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உத்தரவு
பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர ஏற்கனவே கேரளாவில் தடை அமலில் உள்ள நிலையில், ஆசிரியர்களும் வகுப்பு நேரத்தில் போனில் பேசவோ சமூக வலைதளங்களில் செயல்படவோ, கூடாது என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எப்போது அமல்
ஜங்க் புட்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் கேரளாவில் அமலுக்கு வருகிறது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
பெற்றோர்கள் மகிழ்ச்சி
பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதோ, அல்லது பள்ளிகளில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போதோ அங்கிருக்கும் கடைகளில் தரமற்ற திண்பண்டங்களை கேட்டு, (முன்னணி நிறுவனங்களின் பொருட்களை போலவே கவர் வடிவமைக்கப்பட்டு வேறு பெயர்களில் இருக்கும்) அழுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கக் கூடும். பெற்றோரும் வேறு வழியின்றி பிள்ளைகளின் அழுகையை நிறுத்துவதற்காக அவர்கள் கேட்கும் பொருளை வாங்கி கொடுப்பார்கள். இந்நிலையில் கேரளாவில் நடைமுறைக்கு வர உள்ள இந்த புதிய நடவடிக்கையால் போலியான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்யும் ஒரு சில கடைக்காரர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.