ஸ்வப்னா எங்கே.. தங்கம் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு.. விரட்டும் எதிர்க்கட்சி.. கிலியில் கேரள அரசு
அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வந்த ஸ்வப்னாவை போலீசார் தேடி வருகிறார்கள்
திருவனந்தபுரம்: கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னாவின் தங்கம் கடத்தல் விவகாரம், அம்மாநில அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து வருகிறது... முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த கடத்தலில் சம்மதம் உள்ளதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.. அதனால் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்..
அப்போதுதான், ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக அட்ரசுக்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்ததை கவனித்தனர். அதை சோதனை செய்தபோது, 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தன.
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்
2 பேர் பெயர்கள்
தூதரக அதிகாரிகளின் பெயரில் இந்த தங்கத்தை கடத்தியது யார் என்ற விசாரணையில் இறங்கினர். அதில், தூதரகத்தில் ஏற்கனவே வேலை பார்த்த சரித் நாயர் என்பவர் பெயரும், ஸ்வப்னா சுரேஷ் என்பவர் பெயரும் அடிபட்டது. இதில், ஸ்வப்னா யார் என்ற விசாரணை துரிதமானது!
ஸ்வப்னா
ஸ்வப்னா தூதரகத்தில் வேலை பார்த்து நின்றுவிட்டவர். எனினும், தனக்கு கிடைத்த தொடர்புகளை வைத்து, இந்த கடத்தல் காரியத்தை செய்து வந்துள்ளார். ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.. ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை
ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.. இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை விடுத்து வருகின்றன.. தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமை செயலகத்திலிருந்து ஸ்வப்னாவை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்துள்ளனர் என்று பாஜக பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. மேலும், முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சிவகங்கர்
தூதரகத்தில் நிர்வாக செயலாளராக இருந்த ஸ்வப்னா கடந்த 6 மாதங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தாலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் செயலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.. மேலும் ஐடி பிரிவின் நிர்வாக செயலாளராக இருந்துவரும் ஸ்வப்னா, அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.சிவசங்கர், முதல்வர் பிரனாயி விஜயனுக்கு முதன்மை செயலாளரும்கூட!!!
சரித் நாயர்
வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பது பொதுவான விதி.. இதைதான் ஸ்வப்னாவும், சரித் நாயரும் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர் என்கிறார்கள்.. இப்போது ஸ்வப்னா சிக்கி உள்ளதால், பினராயிக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருக்குமா என்ற பகீர் சந்தேகத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள்.
தனி செயலர்
இதனிடையே, முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து சிவசங்கரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.. தற்போது கடத்தலில் ஸ்வப்னாவுடன் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டின் எதிரொலியால், அந்த பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.. எனினும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் பதவியில் மட்டுமே சிவசங்கரன் நீடித்து வருகிறார். முதல்வரின் தனிச்செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மிர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று அம்மாநில அரசின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்வப்னா எங்கே
ஸ்வப்னா இப்போது எங்கே என்றே தெரியவில்லை.. அவரை கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.. இப்போது, 2 நாளைக்கு முன்புதான் ஸ்வப்னா, இந்த பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஸ்வப்னா விவகாரம் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கிளப்பி வருவதுடன், மாநில அரசுக்கே ஆட்டம் காண வைத்துவிடும் நிலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது!