கடத்தல் ராணி ஸ்வப்னா கர்நாடகா தப்பியது எப்படி? உதவியது யார்? பாஜக, காங். கிடுக்குப் பிடி கேள்வி
திருவனந்தபுரம்: நாட்டையே பரபரக்க வைத்த தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா கர்நாடகாவுக்கு தப்பியது எப்படி? ஸ்வப்னா கர்நாடகா தப்ப உதவியது யார்? என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரியின் பெயரில் 30 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற சம்பவம் கேரளாவில் மட்டும் அல்ல.. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தங்க கடத்தலின் மூளையான கேரளா அரசின் தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றிய ஸ்வப்னா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின.
பெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா, சந்தீப் நாயர் - இன்று கொச்சி என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்
சிக்கினார் ஸ்வப்னா
இந்த சம்பவத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரும் சிக்கினார். அவரை பதவியில் இருந்து நீக்கினார் பினராயி விஜயன். இந்த நிலையில் பெங்களூருவில் தங்க கடத்தல் சம்பவத்தின் மூளையான ஸ்வப்னா, அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று இரவு மடக்கி கைது செய்தனர்.
ஸ்வப்னா எஸ்கேப்- பாஜக கேள்வி
ஸ்வப்னாவும் சந்தீப் நாயரும் இன்று கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதனிடையே ஸ்வப்னா, கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தப்பியது தொடர்பாக காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கர்நாடக பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கூறுகையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பால் வாங்குவதற்கே பாஸ் தேவைப்படுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல கட்டாயம் இ பாஸ் தேவை. உயர் அதிகாரிகள் பாதுகாப்புடனேயே ஸ்வப்னா கர்நாடகா தப்பி சென்றார் என்றார்.
காங்கிரஸ் புகார்
எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், தங்க கடத்தல் சம்பவமாக ஒருவாரமாக ஒரு எப்.ஐ.ஆர். கூட ஸ்வப்னாவுக்கு எதிராக பதிவு செய்யவில்லை. இத்தனைக்கும் போலி சான்றிதழ் கொடுத்தது என பல மோசடி புகார்கள் அவர் மீது இருக்கின்றன. ஆனாலும் ஒருநடவடிக்கையுமே இல்லை. தற்போது கேரளாவில் இருந்து ஸ்வப்னா தப்பி சென்றதும் பல கேள்விகளை எழுப்புகிறது என்றார்.
Recommended Video
800 கி.மீ பயணம் எப்படி சாத்தியம்?
தற்போது ஸ்வப்னா எப்படி தப்பிச் சென்றார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் டிரிபிள் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் 800 கி.மீ தொலைவுக்கு ஸ்வப்னா எப்படி தப்பி ஓடினார்? அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.