தங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம்
தங்கக்கடத்தல் ஸ்வப்னாவிற்கு நிறைய முகம் இருக்கிறது போல பத்தாம் வகுப்பு படிக்காமலேயே பல துறைகளில் புகுந்து வந்திருக்கிறார்.
திருவனந்தபுரம்: தங்கம் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாதான் இப்போது கேரளாவில் ஹாட் டாபிக். காரணம் என்னா பொண்ணுப்பா கேரளா மாநில அரசியல்ல இப்படி குண்டை போட்டிருச்சே. ஐடி டிபார்ட்மெண்ட் மட்டுமல்ல மாநில அரசே ஆடிக்கெடக்குப்பா என்று பேசுகிறார்கள். நடிகை கடத்தலில் தொடங்கி சொந்த தம்பியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியது வரை தோண்ட தோண்ட பூதம் புறப்படுகிறது. அது மட்டுமல்ல இப்போது சினிமாவிற்கும் பினாமியாக பைனான்ஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது தங்கக்கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை 4 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஜரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக வேலை செய்யும் ஸ்வப்னா சிக்கியதுதான் எதிர்கட்சியினருக்கு சாதகமாக போய்விட்டது.
பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தவே, எந்த விசாரணைக்கும் தயார் என்று சொல்லி சிபிஐ விசாரணை கேட்டு பிரதமரிடம் கடிதம் எழுதினார். மத்திய அரசு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று... தொண்டை வற்றச் சப்தமிட்டால் மட்டும் போதாது -ஸ்டாலின்
கைதான ஸ்வப்னா
கடந்த வாரம் சனிக்கிழமை இரவில் பெங்களூருவில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவையும், அவரது நண்பர் சந்தீப் நாயரையும் கொத்தாக அள்ளி வந்தது என்ஐஏ போலீஸ். கொச்சி கொண்டு ரிமாண்ட் செய்து கொரோனா பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல விசயங்கள் படிப்படியாக வெளியே வந்தன.
பிளாட் வாங்கிக்கொடுத்த சிவசங்கரன்
பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனிடம் ஜூலை 14ஆம் தேதி மாலையிலிருந்து ஒன்பது மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஸ்வப்னாவின் கணவர் ஜெயசங்கர் பெயரில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகில் ஹெதர் டவரில் ஒரு ஃப்ளாட் புக் செய்து கொடுத்ததாகவும் விசாரணையில் சிவசங்கரன் தெரிவித்திருக்கிறாராம். தங்கக்கடத்தல் கும்பலுடனான தொடர்பு வெட்ட வெளிச்சமாகவே சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்தார் பினராயி விஜயன்.
அமைச்சர் ஜலீல்
ஸ்வப்னாவுடன் போனில் பேசிய தகவல் வெளியானதால், சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல். ரம்ஜான் மாதத்தில் உணவுப் பொட்டலங்கள் வழங்குவது தொடர்பாகவும், அவை வழங்கப்பட்ட பிறகு அதற்கான பில் க்ளெய்ம் செய்வது தொடர்பாகத்தான் ஸ்வப்னாவிடம் பேசினேன் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜலீல். ஆனால் ஸ்வப்னாவிடம் பேசியது தொடர்பாக இதுவரை அமைச்சர் அமைதியாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சினிமாவிற்கு பினாமி மூலம் பணம்
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் துபாயில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் ஸ்வப்னாவின் சினிமா தொடர்பு அம்பலமாகியுள்ளது. கடத்தல் பணத்தைக் கொண்டு சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக பைசல் பரீத் கூறியுள்ளார்.
ரூ.15 லட்சம் பறிமுதல்
ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து ரூ.15 லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணம் ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே ஜூலை 24ம் தேதி இருவரது ஜாமீன் மனுவும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது. இன்னும் என்னென்ன புதிய பூதங்கள் வெளியாகப் போகிறதோ தெரியலையே.