கேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க!
திருவனந்தபுரம்: கேரளாவில் மணமகன் ஒருவர் திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பாக ஒட்டகத்தின் மீது சவாரி செய்து ஊர்வலமாக வந்த போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேனர்களை ஏந்தியபடி வந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மக்கள் பல விஷயங்களை வித்தியாசமாக செய்வார்கள். போராட்டம், ஆர்பாட்டம், ஊர்வலம் என தங்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு காட்டுவதில் கேரள மக்கள் தான் எப்போது முதன்மையாக இருப்பார்கள். அதற்காக எந்த செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்பிஆருக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஹஜா உசேன் என்பவர் வித்தியாசமான முறையில் போராடி இணையதளவாசிகளை கவர்ந்துள்ளார்.
திருமண விழாவிற்கு மாப்பிள்ளை அழைப்பாக ஒட்டகத்தில் சவாரி செய்தபடி திருமண மண்டபத்திற்கு மணமகன் ஹஜா உசேன் அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் தனது கையில் சிஏஏவுக்கு எதிராகவும், என்பிஆருக்கு எதிராகவும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி நகர்வலம் வந்தார்.
திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியில் நடந்த திருமண விழாவில் மாப்பிள்ளை சிஏஏவுக்கு எதிராக போராடியபடி மணமேடைக்கு வந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக தொழிலதிபரும் மணமகனுமான ஹுசைன் கூறுகையில் CAA க்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்த இதைச் செய்யத் தேர்வு செய்தேன். "மெஹர்" (மணமகன் மணமகளுக்கு தங்கம் அல்லது பணத்தை ஒப்படைக்கும் வழக்கம்) உடன், நான் அரசியலமைப்பின் நகலையும் மனைவிக்கு கொடுத்தேன். CAA நிராகரிக்கப்பட வேண்டும் "என்று கூறினார்.