அரசு பஸ்கள் சேதம்.. ரூ.5.20 கோடி வழங்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு கேரள ஹைகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ம் தேதி நடந்த முழு அடைப்பில் அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக கேரளா போக்குவரத்து கழகம் தொடர்ந்த வழக்கில் ரூ.5.20 கோடியை டெபாசிட் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
கேரளா, தமிழகம், கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 13 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ, அமலாக்கத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
என்ஐஏ சோதனை.. நாங்கள் ஜனநாயக ரீதியாக இயங்குகிறோம்.. தடை செய்ய முடியாது.. தமிழக பிஎப்ஐ விளக்கம்
100க்கும் அதிகமானவர்கள் கைது
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் சோதனையின் முடிவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 10 மாநிலங்களில் நடத்தப்படும் முக்கிய நடவடிக்கையில் என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் மட்டும் 20க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முழு அடைப்பு- பஸ்கள் சேதம்
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர். என்ஐஏ சோதனைக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் கடந்த 23ம் தேதி நடந்தது. இந்த போராட்டத்தை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னின்று நடத்தியது. இந்த போராட்டத்தில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதனால் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பல இடங்களில் மறியல் போராட்டத்தால் பஸ்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பொதுவாக முழு அடைப்புக்கு 7 நாளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும். ஆனால் அந்த போராட்டத்தில் அது பின்பற்றப்படவில்லை. இதனால் கேரள உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கேரளா மாநில போக்குவரத்து கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், ‛‛கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக மொத்தம் 58 பஸ்கள் சேதமடைந்துள்ளன. டிரைவர்கள், கண்டக்டர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல இடங்களுக்கான பஸ் சேவைகள் தடைப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் முழு அடைப்பு போராட்டத்தின்போது போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகை ரூ.5.06 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தொகையை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில் தான் இன்று வழக்கு விசாரணைக்க வந்தது.நீதிபதிகள் ஏ கே ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் முகமது நியாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது 7 நாளுக்கு முன்பே நோட்டீஸ் வழங்காததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அன்றைய தினம் நடந்த சம்பவங்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என நீதிமன்றம் கூறியது.
ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு
மேலும் போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு கேரளாவில் மாநில அரசு பஸ்களை சேதப்படுத்தியதற்காக ரூ. 5.20 கோடியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர் 2 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதோடு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் பணம் செலுத்தும் வரை ஜாமீன் வழங்க கூடாது எனவும் நீதிமன்றம் கூறியது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை
இதற்கு மத்தியில் நேற்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அமைப்புகள் செயல்படாத நிலையில் தான் கேரளா உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.