திடீர் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட 'சர்ச்' வடிவில் இருந்த சினிமா செட்.. வெளியாகிய ஷாக் வீடியோ
போடப்பட்டிருந்த தேவாலய சர்ச் செட் அடித்து நொறுக்கப்பட்டது
திருவனந்தபுரம்: சர்ச் வடிவில் போட்டிருந்த சினிமா செட் ஒன்று கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.. ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர் இதனை இடித்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் 'மினால் முரளி' என்ற படத்திற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.. டோவினோ தாமஸ் இந்த படத்தின் ஹீரோ. படப்பிடிப்புக்காக சர்ச் வடிவிலான செட் ஒன்று சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டிருந்தது. இந்த செட்டுக்கு ராஷ்டிரிய பஜ்ரங் தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், இந்த செட் கலாடி மகாதேவா கோயிலுக்கு முன்னால் இருப்பதாகவும் சொல்லி, உடனே அந்த செட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ராஷ்டிரிய பஜ்ரங் தள் அமைப்பினர் கூறிவந்துள்ளனர்.. பலமுறை சொல்லியும் இந்த செட் அகற்றப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
அதனால், ராஷ்டிரியா பஜ்ரங் தள் அதிரடியாக செட் போட்ட இடத்திற்கு வந்தது.. மொத்த செட்டையும் அடித்து நொறுக்கி தள்ளியது.. ஆளுக்கு ஒருவர் கையில் ஆயுதங்களுடன் செட்டை இடிப்பது, உடைப்பது போன்ற போட்டோக்களும் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
காலடி பஞ்சாயத்திடம் முறையான அனுமதி பெறாமல் செட் அமைக்கப்பட்டதாகவும், அதனால்தான் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் பஜ்ரங் தள் அமைப்பினர் சொல்கிறார்கள்.. ஆனால், பிப்ரவரி மாதமே காலடி பஞ்சாயத்திடம் அனுமதி கேட்டு பெற்றுவிட்டதாக சினிமா குழுவினர் கூறுகிறார்கள். அதனால் இதன் உண்மைதன்மை என்னவென்று தெரியவில்லை.
பெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்
ஆனால், இந்த செட் அதிகமாக செலவு செய்து போடப்பட்டதால், பணம் எல்லாம் நஷ்டம் ஆகிவிட்டதாக படக்குழுவினர் புலம்புகிறார்கள்.. இது தங்களுக்கு வேதனையை தருவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், போலீசில் இதை பற்றி புகாரும் தெரிவித்துள்ளனர். எனினும் சர்ச் வடிவில் இருந்த இந்த செட்டை உடைத்தற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.