சபரிமலையில் தந்திரி நடத்திய புனித பூஜை... நோட்டீஸ் அனுப்பிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம்
திருவனந்தபுரம்: புனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 பெண்கள் சாமி தரிசனம்
இந்நிலையில், கடந்த 2 ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
தந்திரி பூஜை
கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
விளக்கம் வேண்டும்
இதற்கிடையில், புனித பூஜை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இது குறித்து தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது விளக்கத்தை கேட்டபின், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு தலைவர் பத்மகுமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
முகநூலில் பதிவு
இந்தநிலையில், கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் இதுபற்றி ஆணையத்தில் விளக்கம் அளிக்க, தந்திரியை அழைத்திருந்தது. கடந்த 17 ம் தேதி அவர் ஆஜராகி இருக்க வேண்டும். அவர் வராததால் ஷோகாஷ் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இதனை உறுதி செய்த ஆணைய உறுப்பினர் அஜய்குமார் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். எனவே, தந்திரி கோயிலை புனிதப்படுத்தும் பூஜை செய்தது, தீண்டாமையை தான் காட்டுகிறது என்று முகநூலில் தெரிவித்துள்ளார்.