தங்க கடத்தல்.. 2 கேங்.. சினிமா பாணியில் சாலையில் நடந்த கார் சேசிங்.. கேரளாவை உலுக்கிய ஷாக் விபத்து!
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ஒரு சாதாரண விபத்து என்று போலீஸ் நினைத்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ராமநாட்டுக்கர பகுதியில் நேற்று சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. எஸ்யூவி வகை கார் ஒன்று வேகமாக வந்து லாரியில் மோதியதில், காரில் இருந்த 5 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தை சாதாரண சாலை விபத்தாக பதிவு செய்த போலீஸ், விசாரணை அவசியம் இல்லை என்றுதான் நினைத்தது. காரின் மீது மோதிய லாரி டிரைவரை கைது செய்த போலீஸ், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து மட்டும் விசாரணை நடத்தினார்கள்..
சந்தேகம்
அப்போது போலீஸிடம் வாக்குமூலம் அளித்த லாரி டிரைவர், நான் காரில் மோதவில்லை. கார்தான் உருண்டு வந்தது. கார் என் லாரி மீது மோதுவதற்கு முன்னே வேகமாக சாலையில் உருண்டபடிதான் வந்தது என்று குறிப்பிட்டார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸ் அந்த விபத்தின் சிசிடிவி கேமரா வீடியோவை சோதனை செய்தனர்.
சோதனை
இதில் அந்த எஸ்யுவி கார் வேகமாக வந்து, வளைவில் திரும்பும் போது, தடுமாறி, கவிழ்ந்து பலமுறை பல்டி அடித்து பின் லாரி மீது மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த காருக்கு முன் இன்னும் 2 கார்கள் இதேபோல் வேகமாக சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் ஏன் வேகமாக சென்றார்கள், என்னதான் அங்கு நடந்தது என்று கேரள போலீஸ் விசாரணையில் குதித்தது.
பலியானவர்கள்
இந்த விசாரணையை அடுத்து விபத்தில் பலியான 5 பேரும் பிரபல கடத்தல் கும்பல் என்று தெரிய வந்தது. அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு இடங்களில் தங்க கடத்தல் புகார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக தங்கம் கடத்தி கோழிக்கோடு விமான நிலையம் மூலம் அதை உள்ளே கொண்டு வரும் கும்பல் இது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்களின் பெயர் சாஹிர், தாஹிர், நஸீர், சுபையர், ஹாசய்னர்.
எப்படி நடந்தது
இதையடுத்து இவர்களுக்கு முன் சென்ற இரண்டு காரும் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த 2 காரில் சென்ற 10 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கேங்க் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் இன்னொரு விஷயமும் சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி
அதன்படி கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இன்னொரு கார் இவர்களை சேசிங் செய்துள்ளது. 3 கார் முன்னே செல்ல இன்னொரு கார் நான்காவதாக இவர்களை சேசிங் செய்துள்ளது. இதில் வேகமாக சென்ற போதுதான் ஒரு கார் விபத்துக்கு உள்ளாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இன்னொரு கேங்கை தேடும் பணியும் நடந்து வருகிறது.
அயன்
அயன் படத்தில் கடத்தல் கும்பல்களுக்கு இடையில் மோதல் இருப்பது போல நிஜ வாழ்க்கையில் கேரளாவில் மோதல், சேசிங் நடந்துள்ளது. தங்க கடத்தலில் ஏற்பட்ட மோதல் சேசிங் வரை சென்று பின் விபத்தில் முடிந்துள்ளது. போலீசார் இந்த இரண்டு கேங்கை சேர்ந்த கடத்தல் கும்பலை பிடிக்கும் முடிவில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.